டெல்லி: பார்தி ஏர்டெல்- ஏர்செல் நிறுவனங்களுக்கு மத்தியிலான 4ஜி ஸ்பெக்ட்ரம் பகிர்வு குறித்த 3,500 கோடி ரூபாய் திட்டத்திற்குத் தொலைத்தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதால், ஏர்டெல் - ஏர்செல் மத்தியிலான இந்தத் திட்டத்திற்கு ஏர்செல் மறுப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைத்துத் தடைகளையும் தாண்டி தற்போது ஏர்செல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4ஜி அலைக்கற்றைகளை ஏர்டெல் பயன்படுத்திக்கொள்ளும் இந்த 3,500 கோடி ரூபாய்க்குத் திட்டத்திற்குச் சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏர்டெல்- ஏர்செல்
ஏர்செல் நிறுவனம் தற்போது பயன்படுத்தி வரும் 4ஜி அலைக்கற்றைகளை இந்தியாவிலேயே அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளவே இந்த ஒப்பந்தம்
ஏர்செலுக்குச் சொந்தமான இந்த 4ஜி அலைக்கற்றைகளில் போதுமான பயன்பாட்டாளர்கள் இல்லை என்பதால் தற்போது இதனை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
ஏர்டெல்
கடந்த சில மாதங்களாக ஏர்டெல் நிறுவனத்தில் 4ஜி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்க ஏர்டெல் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைக்கற்றை வாங்கியுள்ளது.
8 வட்டங்கள்
இந்தியாவில் தமிழ்நாடு (சென்னை உட்பட), பிகார், ஜம்மு கஷ்மீர், மேற்கு வங்காளம், அசாம், ஆந்திர பிரதேசம், ஒடிஷா மற்றும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஆகிய 8 வட்டங்களில் ஏர்செல் நிறுவனத்திடம் இருக்கும் 4ஜி அலைக்கற்றைகளை ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும்.
பிரச்சனை
ஒரு வட்டத்தில் ஒரு நிறுவனம் 25 சதவீதத்திற்கும் அதிகமான அலைக்கற்றை வைத்துக்கொள்ளக் கூடாது என்பது விதிமுறை, இதனால் ஏர்டெல் நிறுவனத்திடம் ஏர்செல் அலைக்கற்றையைக் கைப்பற்றிய பின், ஒடிஷா வட்டத்தில் கூடுதலாக இருக்கும் 1.2 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்குமாறு தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் அறிவித்தது.
இதன் படி ஏர்டெல் நிறுவனமும் கூடுதலாக இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை அரசிடம் ஒப்படைத்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்து இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்ய உள்ளது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டி போட ஏர்செல் நிறுவனத்தையே வாங்கியுள்ளது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்.
ஏர்டெல்
சந்தையில் போட்டி அதிகரித்துள்ளதை அடுத்து, சிறப்பான சேவை அளிக்கும் நிறுவனத்தை நாடும் மக்கள் மத்தியில், தனது சேவையை மேம்படுத்திக்கொள்ளச் சந்தையில் இருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறது ஏர்டெல்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முழுமையான சேவை அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் மிகப்பெரிய டெலிகாம் புரட்சி ஏற்பட உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.