டெல்லி: மத்திய அரசு பல நாட்களாகக் கிடப்பில் போட்டு இருக்கும் 7வது சம்பள கமிஷன் அறிக்கையை ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம் உயர்வு பெற உள்ளனர்.
பொதுவாக மத்திய அரசு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 மையமாக வைத்தே புதிய சம்பளம், பதவி உயர்வு, ஊக்கத் தொகை என அனைத்தையும் வழங்கும். இந்நிலையில் மத்திய அரசு ஜனவரி 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு புதிய சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளது.
ஆனால் அகவிலைப்படி தவிரப் பிற அல்லொவன்சஸ் சதவீதத்தை நிர்ணயம் செய்யும் பணிகளைத் தற்போது சம்பள கமிஷன் மற்றும் நிதியமைச்சகத்தின் செயலாளர் என் பல தரப்பினர் ஒன்றிணைந்து இறுதிக்கட்ட முடிவுகளை எடுத்து வருகிறது.
அதேபோல் ராணுவ வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்யும் பணிகளையும் இக்குழு செய்து வருகிறது.
7வது சம்பள கமிஷன் அமலாக்கத்தின் மூலம் நுகர்வோர் சந்தை மிகப்பெரிய வர்த்தகத்தைப் பார்க்க காத்துக்கிடக்கிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பினரும் இதன் அமலாக்கத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
குறிப்பாகத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள். சம்பள கமிஷன் அமலாக்கத்தின் மூலம் ரியல் எஸ்டேட் முதல் வாகன விற்பனை வரை அனைத்தும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே மத்திய அரசு ஊழியர்களை விட வர்த்தகச் சந்தை சம்பள கமிஷனை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கிறது.