பெங்களுரூ: இந்திய சந்தையில் அமேசான் தனது வர்த்தகத்தைத் துவங்கிய பின்னர், நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மிகப்பெரிய அளவிலான வர்த்தகச் சரிவையும் சந்தை மதிப்பையும் இழந்தது, தனது ஆஸ்தான முதலீட்டாளர்கள் மூலமாகவே மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆனால் இப்போது கபாலியை போல் வெறிகொண்டு எழுந்துள்ளது..
திரும்ப வந்துட்டேன்னு செல்லு.. 6 மாசத்துக்கு முன்னாடி எப்படிப் போனேனோ அப்படியே வந்துருக்கேன்னு செல்லு..இது அமேசான் நிறுவனத்திற்குக் கொடுக்கும் பதிலடி..!
பிளிப்கார்ட்
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் நிலையான உயர்வில் வர்த்தகச் சந்தையைப் பெற்று வந்த பிளிப்கார்ட், அமேசான், அலிபாபா போன்ற பன்னாட்டு நிறுவனங்களாலும், ஸ்டார்ப் அப் சந்தையின் வீழ்ச்சியாலும் இந்நிறுவனத்தின் மதிப்புக் குறைந்தது.
இதில் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.
வாலிக் கோ மதிப்பீடு
தற்போதைய நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருக்கும் வாலிக் கோ நிறுவனம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பீட்டை சுமார் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
108.04 அமெரிக்க டாலர்
2013ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் முதலீடு செய்தது வாலிக் கோ. 2015ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஒரு பங்கு 98.19 அமெரிக்க டாலர் என்ற விலையில் இருந்த பங்குகள் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இதன் பங்கு மதிப்பு 108.04 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என வாலிக் கோ தெரிவித்துள்ளது.
11.6 பில்லியன் டாலர்
2015 ஜூலை மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் 700 மில்லியன் டாலர் நிதி திரட்டும் போதும் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 15.2 பில்லியன் டாலராக இருந்தது.
ஆனால் 20.2 சதவீதம், 12 சதவீதம் என்று அடுத்தடுத்து இதன் மதிப்பீட்டை முதலீட்டு நிறுவனங்கள் குறைத்தது இந்நிறுவன வர்த்தகத்தை அதிகளவில் பாதித்தது.
சரிவு..
இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தின் மதிப்புச் சந்தையில் 10.5 பில்லியன் டாலராகக் குறைந்தது.
6 மாத வளர்ச்சி
ஆனால் கடந்த 6 மாதத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து லாபமும் அதிகரித்துள்ளது. இதனுடன் ஜபாங் நிறுவன கைப்பற்றுதலும் பின்னர்ப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த கலரும் மாறியுள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்புத் தற்போது 11.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வர்த்தகப் பாதிப்பு
கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்த பிளிப்கார்ட் 2015ஆம் ஆண்டில் நிலையான வர்த்தகத்தைப் பெற்றாலும் செலவினங்களின் அளவுகள் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக இந்நிறுவனத்தின் வர்த்தக மற்றும் வருவாய் அளவுகளை ஆய்வு செய்து, மியூச்சுவல் ஃபண்ட் மேலாண்மை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் நிறுவனங்கள் பங்குகள் மதிப்பை 27 சதவீதம் குறைத்தது.
15.2 பில்லியன் டாலர்
சமீபத்தில் பிளிப்கார்ட் தனது நிறுவனத்தின் மதிப்பு 15.2 பில்லியன் டாலராக உள்ளது எனப் பெருமைப்படும் அளவில் அறிவிப்பை வெளியிட்டது.
மோர்கன் ஸ்டான்லி
கடந்த 2013ஆம் ஆண்டு மோர்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் நிறுவனத்தில் 360 மில்லியன் டாலர் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 2 சதவீத அளவிலான பங்குகளைக் கைப்பற்றியது.
1,000 ஊழியர்களைப் பணிநீக்கம்
பிளிப்கார்ட், தனது நிறுவனத்தின் தகுதி திறனை எட்டாத (Professional Expectation) 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களைத் தகுதி திறன் என்ற பெயரில் அதிகளவில் பணிநீக்கம் செய்து தனது செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் பணி நீக்கத்திற்கும் ஜபாங் (Jabong) நிறுவனத்தைக் கைப்பற்றியதற்கும் தொடர்புண்டா..? எனப் பல்வேறு கோணங்களில் செய்தி வெளியான நிலையில் இதனை மறுத்துள்ளது பிளிப்கார்ட்.