டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தனது யூரியா மற்றும் உரம் பிரிவுகளை நார்வேயைச் சேர்ந்த யாரா இண்டர்நேஷ்னல் நிறுவனத்திற்கு 2,670 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உள்ள பாப்ரலா ஆலை மற்றும் அதன் சொத்து, கடன் அனைத்தும் 9 முதல் 12 மாதத்திற்குள் முழுமையாக ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பாப்ரலா ஆலையில் பணிபுரியும் 425 ஊழியர்களைக் கண்காணிக்க யாரா நிறுவனம் 51 நபர்களை இந்தியாவில் பணிக்கு அமர்த்த உள்ளது.
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் இதேப் போன்று மேற்கு வங்கம் மாநிலம் ஹால்டியாவில் உள்ள 12 மில்லியன் டன் பாஸ்பேட் உரம் ஆலையில் முதலீடு செய்வதையும் முழுவதுமாக நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் யூரியா உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டும் இந்திய அரசாங்கம் நிர்ணயம் செய்த விலைக்கு மட்டுமே செய்ய முடிகிறது. இதற்கு அரசு அளிக்கும் மானியத்தை தாமதமாக அளித்து வருவதால் அன்றாட செலவுகளுக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் இதனால் நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி நார்வேயின் யாரா இண்டர்னேஷனல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்வின் டோரே ஹோல்ஸ்தெர் கூறுகையில் இது எங்களுடைய வளர்ச்சியில் மிக முக்கியமான நடவடிக்கை என்றும், இந்தியாவின் மக்கள் வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் இதனால் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.