டெல்லி: இந்தியாவின் விடுதலைக்காகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேயேர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை மத்திய அரசு 5,000 ரூபாய் உயர்த்தி 30,000 ரூபாயாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டபடி உள்துறை அமைச்சகம் ஓய்வூதிய உயர்வை அறிவித்துள்ளது.
20 சதவீதம் உயர்வு
பிரதமர் நரேந்திர மோடியின் 70வது சுதந்திர தின உரையில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
அந்தமான் செல்லூலார் சிறை
இதன் படி அந்தமான் செல்லூலார் சிறையில் பல இன்னல்களைச் சந்தித்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிக்கு அளித்து வந்த 24,775 ரூபாய் என்ற ஓய்வூதிய தொகையை 5,000 அதிகரித்து 30,000 ரூபாயாக அளிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
INA வீரர்கள்
அந்தமான் அல்லாமல் இந்தியாவிற்கு வெளியில் சிறைவாசம் அனுபவித்த வீரர்களின் ஓய்வூதியம் 23,085 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக உயர்த்தவும்,
அதேபோல் இந்திய தேசிய ராணுவத்தில் (INA) இருந்து போராட்ட வீரர்களின் ஓய்வூதியமும் 21,395 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்த்தப்படும் என உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படம்: இந்தியாநெட்சோன்
ஆகஸ்ட் 15
இப்புதிய ஓய்வூதியம் ஆகஸ்ட் 15, 2016ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாரிசுகளுக்கு
இந்நிலையில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவரது மனைவி இறந்துவிட்டால், அவர்களின் வாரிசுகள் ஒய்வூதிய தொகையில் 50 சதவீதம் பெறலாம்.
வீரர்கள்
இன்றளவில் இந்தியாவில் சுமார் 37,000 விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளனர்.