மும்பை: வியாழக்கிழமை நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் சூறாவளியில் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்த திருட்டு வழக்கு காணாமல் போனது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் என்றால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி தான். இக்குழுமத்தின் 60 சதவீத வருமானம் இதன் மூலம் வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்திய அரசுக்கு சொந்தமான ஒஎன்ஜிசி நிறுவனத்தில் கையை வைத்துள்ளது.
எரிவாயு உற்பத்தி
ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணி நிறுவனங்கள் இணைந்து ஆந்திரா மாநிலத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் பணியை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது.
இங்கு தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி
ஆந்திராவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் அதன் கூட்டணி நிறுவனங்களாக பிபி பிஎல்சி மற்றும் நிகோ ரிசோர்சஸ் ஆகியவை இணைந்து கூட்டாக எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தன.
இது வரை ஓஎன்ஜிசி நிறுவனம் தங்களை ரிலையன்ஸ் நிறுவனம் ஏமாற்றி எரிவாயு கிடங்கை அபகரித்துக் கொண்டதாகவோ அல்லது மத்திய அரசோ இதுபற்றி புகார் அளிக்கவில்லை.
ஏற்கனவே தெரியும்
இதுகுறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஏற்கனவே தெரியும் என்றும் இரண்டு நிறுவனங்களுக்குமான நீர் தேக்கங்களை பயன்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டு அணுகியதாகவும் ஆனால் 6 வருடங்களாக இது குறித்து எதற்கும் ரிலையன்ஸ் நிறுவனம் வளைந்து கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருநிறுவனத்தையும் விசாரிக்க வேண்டும்
ரிலையன்ஸ் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் இருவரையும் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் ஒரு குழு நிறுவப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் இரு நிறுவனங்களும் சரியான தகவல்களைத் தர மறுப்பதாக ஹைட்ரோகார்பன்ஸ் பொது இயக்குநரகம் கூறியுள்ளது.
செப்டெம்பர் இறுதிக்குள் முடிவு
இதுகுறித்த அறிக்கை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடன் புதன் கிழமை சமர்ப்பிக்கப்பட்ட போது ஏபி ஷாவிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்வதாகவும் செப்டெம்பர் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அபராதம் விதிக்க வேண்டும்
ரிலையன்ஸ் நிறுவனம் இது குறித்து 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இது குறித்து மத்திய அரசு சரியான முடிவை எடுத்துத் தகுந்த அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இழப்பீடு குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு உரிமைக் கோர ஏதும் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைகேடு
மேலும் இது ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இருநிறுவனமும் கூட்டாக இணைந்தே இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இரண்டு நிறுவனங்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நீதிபதி ஏபி ஷா
ஓய்வுபெற்ற நீதிபதி ஏபி ஷா இது பற்றி கூறும் போது விரிவான அறிக்கை பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இது பற்றி அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் பரிந்துரைத்துள்ளோம் என்று மட்டும் தெரிவித்தார்.