டெல்லி: மத்திய அரசு மாற்று எரி சக்திக்காக பல முயற்சிகளை எடுத்து வரும் வேலையில் இந்தியா விரைவில் பெட்ரோல் இறக்குமதியை முற்றிலும் நிறுத்திவிடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே பெட்ரோல் அதிகமாக இறக்குமதி செய்யும் டாப் 5 நாடுகளில் நான்காம் இடத்தில் இந்தியா இருக்கும் போது 'விரைவில் இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்ய தேவையில்லை' என்று கூறிய நிதின் கட்கரியின் விளக்கத்தைப் பார்ப்போம் வாருங்கள்.
மாற்றத்திற்கான முயற்சி
இந்தியாவை பெட்ரோல் இறக்குமதி செய்யாத நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவே நாங்கள் மாற்று எரி சக்திகளான எத்தனால், மெத்தனால், பையோ சிஎன்ஜி போன்றவற்றை ஊக்குவித்து வருகிறோம்.
இதனால் கிராமப்புற மற்றும் விவசாய மையங்களில் பெரிய வேலை உருவாகும் என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பெட்ரோல் இறக்குமதி
உலகளவில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளதால் இந்தியா தற்போது 4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணை இறக்குமதி செய்வதாகவும் இதுவே முன்பு 7.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த மெத்தனால் பொருளாதாரம் குறித்த மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம்
இந்தியாவின் பொருளாதாரம் உலகின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, விவசாயம், மூங்கில், உபரி நிலக்கரி மற்றும் சக்தியை பயன்படுத்தி பணம் செய்ய இந்தியாவிற்கு "பொன்னான வாய்ப்பு" உள்ளது.
10,000 விவசாயிகள் இறப்பு
விதர்பாவில் 10,000 விவசாயிகள் இறந்ததைக் குறிப்பிட்டு பேசிய இவர் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. விவசாயத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் இது. மாற்றுச் சக்திக்காக விவசாய பொருட்களை பயன்படுத்தும் போது விவசாயிகள் மிகுந்த பயன் அடைவர் என்றார்.
பொருளாதார நிலைமை
சமூக பொருளாதார நிலைமை இப்போது சரியாக இல்லை, விவசாயம் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இந்த மாற்று எரிசக்தி முறை சமூக பொருளாதார நிலைமையை விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயத்தைக் காப்பாற்றுதல்
கிராமப்புற மக்கள் மற்றும் விவசாய துறையை காப்பாற்றுவதற்காகச் சரியான முயற்சியை எடுக்க வேண்டும். பருத்தி வைக்கோல், கோதுமை வைக்கோல், அரிசி வைக்கோல் மற்றும் சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு போன்றவற்றைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க இயலும். நகராட்சி கழிவுகளில் இருந்தும் எத்தனால் எடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
குப்பையைச் செல்வம் ஆக்கும் முயற்சி
குப்பையைச் செல்வம் ஆக்கும் முயற்சியில் எத்தனால் மற்றும் பையோ வாயுவினை குப்பையில் இருந்து எடுக்கத் துவங்கினால் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி வரை சேமிக்கலாம்.
1 டன் நெல் வைக்கோலில் இருந்து 400 லிட்டர்
ஐரோப்பாவில் பையோமாஸ் வழியாக எத்தனால் எடுப்பதாகவும், ஒரு டன் நெல் வைக்கோலில் இருந்து 400 லிட்டர் வரை எத்தனால் எடுக்க இயலும் என்றும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மூங்கில்களில் இருந்து எத்தனால் எடுக்கலாம் என்று கூறினார்.
சுற்றுச் சூழல் மாசுபடுதலைத் தடுக்கலாம்
இதன்மூலம் ஹரியானா மாநில விவசாயிகள் கோதுமை வைக்கோலை எரித்ததினால் ஏற்பட்டது போன்ற சுற்றுச் சூழல் மாசுபடுதலைத் தடுக்கலாம். இது தவிர நகராட்சி கழிவுகள் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள் கழிவுகள் போன்றவற்றையும் பயன்படுத்தியும் பையோ எரிபொருளைத் தயாரிக்கலாம்.
நிலக்கரி சுரங்கங்கள்
இவை மட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாகவும் மீத்தேன் எடுக்கலாம் ஆனால் இந்தச் சுரங்கங்களை உடைய நிறுவனங்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை என்றும் இது சரி அல்ல என்றும் தெரிவித்தார்.