சென்னை: ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது உற்பத்தி மையங்களில் இருந்து மூன்று வருடத்தில் 10,000 தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ரேமண்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்ஜய் பெல் இதுபற்றி கூறுகையில் தொழிலாளர்களை நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பணியில் ஈடுபடுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரேமண்ட்ஸ் நிறுவனம்
ரேமண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள 16 உற்பத்தி ஆலைகளில் மொத்தம் 30,000 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். தோராயமாக 2000 தொழிலாளர்கள் ஒரு ஆலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை நிறுவுவதால் 20,000 பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று கூறினார்.
ஒரு ரோபோட் 100 பணியாளர்களுக்குச் சமம்
ஒரு ரோபோட் 100 பணியாளர்களின் வேலையைச் செய்யும். இது சீனாவில் நடைபெற்று வருகிறது, விரைவில் இந்தியாவிலும் இது நடக்கும் என்றார்.
ஜவுளித் துறையில் நிறைய மனிதவளம் தேவைப்படுகின்றது. அதைக் குறைக்கும் முயற்சியில் தொழில்நுட்பங்களை நிறுவும் குழு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
தொழில்நுட்பங்களின் ஆதிக்கம்
இந்தியா பெருநிறுவனங்களில் குறிப்பாக உற்பத்தித் துறைகளில் மெதுவாகத் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது என்று கூறியுள்ள நிபுணர்கள், இதனால் இந்தியாவில் 10 சதவீதம் வரை வேலையின்மை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
வேலை இழப்பு
அமெரிக்க ஆயு நிறுவனம் ஒன்று இது பற்றி கருத்து தெரிவிக்கையில் இந்திய ஐடி சேவைத் துறைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் சில வருடங்களில் 6.4 லட்சம் பணியாளர்கள் வேலையை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
நம்பிக்கையின் பக்கம்
ஒரு பக்கம் வேலை இழப்பு அதிகரிக்கும் என்ற நிலையில் 56 சதவீதம் வரை அதிக திறமையுள்ளவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
பிக் டேட்டா, பகுப்பாய்வு, இயந்திர கற்றல், இயக்கம், வடிவமைப்பு, இணையதள விவரங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் அதிக வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெருகும் என்றும் கூறப்படுகிறது.