உலகின் முன்னணி வர்த்தகச் சந்தை ஆய்வு அமைப்பான எஸ் அண்ட் பி குளோபல் ரேடிங்கஸ் நிறுவனம் அடுத்தச் சில வருடங்களில் இந்தியா எவ்விதமான உந்து சக்தியும் இல்லாமல் இயல்பான வர்த்தகத்தைக் கொண்டே 8 சதவீதம் வளர்ச்சியை எளிமையாக எட்டிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீர்திருந்த நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது என எஸ் அண்ட் பி நிறுவனம் ஆசிய பசிபிக் பொருளாதார ஸ்னாப்ஷாட் நிகழ்ச்சியில் தெரிவித்தது.
இந்தச் சீர்திருத்த நடவடிக்கையில் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு மிகப்பெரிய பங்கு உண்டு எனவும், வேகமாக வளர்ச்சியை அடைந்து வரும் நுகர்வோர் சந்தையும் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ளதாகவும் இந்த வர்த்தக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்குத் தற்போது மிகப்பெரிய தடையாக இருப்பது பணவீக்கம் தான், இதனைக் களைய நுகர்வோர் சந்தையில் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் உணவுப் பொருள், எரிவாயு, மற்றும் பிற பொருட்களின் விலையைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது என எஸ் அண்ட் பி தெரிவித்தது.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவுகள் ஜனவரி-மார்ச் மாத காலத்தில் 7.9 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் -ஜூன் காலாண்டில் 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் 2016-17ஆம் நிதியாண்டின் முடிவில் இந்திய பொருளாதாரம் சுமார் 7.6 சதவீத வளர்ச்சியை அடையும் என எதிர்பார்ப்பதாகவும், அடுத்தச் சில வருடங்கள் வளர்ச்சி அளவு 8 சதவீதத்தையும் தாண்டும் எனவும் தனது கணிப்புகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது எஸ் அண்ட் பி அமைப்பு.