சென்னை: சீனாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனம் ஹவாய் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பணியை அக்டோபர் மாதம் முதல் துவங்குகிறது.
இதற்காக அமெரிக்காவின் ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் எனப்படும் ஃப்ளெக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.
30 லட்சம் போன்கள், 1,500 பேர் வரை வேலை வாய்ப்பு
அக்டோபர் முதல் வாரம் முதல் தனது ஹவாய் ஹானர் ஸ்மார்ட்போன்களை சென்னையில் உள்ள ஃப்ளெக்ஸ் ஆலையில் 2017 ஆம் ஆண்டிற்குள் 30 லட்சம் போன்களை தயாரிக்கும் பணியில் ஹவாய் நிறுவனம் இறங்கி உள்ளது.
இதனால் 1,500 பேர் வரை வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
40 வது மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனம்
இரண்டு வருடத்தில் 40 வது மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனமாக இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஐடி மற்றும் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் மையமாக மாற்ற இருப்பதாகத் தெரிவித்தார்.
உலகின் இரண்டாம் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா இருக்கும் நிலையில் நமது அரசு பல நிறுவனங்களை இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு விடுத்துவருகிறது.
வளர்ந்து வரும் சந்தை
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ந்து வரும் நிலையில் உள்ளூர் உற்பத்தி தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தத் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் உதவுவார்கள் என்றும் ரவி ஷங்கர் தெரிவித்தார்.
ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ்
உலகளவில் ஹாவாய் நிறுவனத்திற்கு ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெரும் பங்காளர்களாக உள்ளனர். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் லெனோவா மற்றும் மோடோராலா நிறுவனத்திற்கும் ஸ்மார்ட்போன் தயாரித்து வழங்கு பணியை ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
ஹவாய்
ஹவாய் நிறுவனம் இந்தியாவில் 16 வருடங்களாக மொபைல் வர்த்தகம் செய்து வந்த நிலையில், 1999 ஆம் ஆண்டே பெங்களூரூவில் தங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஹாவாய் மற்றும் ஹானர் என்ற இரு பிராண்ட் பெயர்கள் கொண்ட நிறுவனமாக ஸ்மார்ட் போன்களை விற்று வருகிறது. தனது முதல் ஹவாய் பிராண்ட் போனை இந்தியாவில் ஏறத்தாழ மூன்று வருடம் கழித்து அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹவாய் நிறுவனம் தான் இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் சீனா நிறுவனம் என்று குறிப்பிடத்தக்கது.
50,000 ஸ்டோர்கள்
ஹவாய் போன்களுக்கு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருக்கும் என இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்த வருடத்தின் இறுதிக்குள் சில ஆயிரங்களாக உள்ள ஹவாய் ஸ்டோர்களின் எண்ணிக்கையை 50,000 ஸ்டோர்களாக அதிகர்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
சீனாவின் சியோமி நிறுவன இதேப் போன்று ஸ்மார்ட்போன் தயாரிக்க இந்தியாவில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.