டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்டரம் ஏலம் மிகவும் குறைந்த அளவிலான வரவேற்புடன் சனிக்கிழமை துவங்கியது.
இந்தியாவில் ஜியோ நிறுவனத்தைச் சமாளிக்க டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சித்திட்டத்திற்கு அதிகளவிலான கவனத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளதால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் டெலிகாம் நிறுவனங்கள் ஆர்வத்தைக் காட்டவில்லை.
ஏலத்தின் துவக்க நாளில் 700 மெகா ஹெட்ஸ் பேன்ட் ஏலம் விடப்பட்ட நிலையில், எந்த ஒரு நிறுவனமும் ஏலம் எடுக்காத காரணத்தால் மோசமான துவக்கத்தைச் சந்தித்தது ஸ்பெக்ட்ரம் ஏலம்.
முதல் ஏலத்தின் மூலம் மத்திய அரசு சுமார் 53,500 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 700 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை யாரும் வாங்க முன்வராத நிலையில், சனிக்கிழமை ஏலம் விடப்பட்ட 2,300 மெகாஹெட்ஸ், அதாவது 4ஜி சேவைக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
700 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை போலவே 900 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தையும் யாரும் விலை கோரவில்லை. இதற்குக் காரணம் மிகவும் குறைந்த அளவிலான அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதால் யாரும் விலை கோரவில்லை.
தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்குப் போட்டி மிகவும் குறைவாக உள்ளதால், கூடிய விரைவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடத்து வரும் ஏலத்தில் சுமார் 2,355 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் ஏலம் விடப்படுகிறது. மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஏல விலையின் படி இந்த ஏலத்தில் 5.6 லட்சம் கோடி ரூபாய் வருமானம் பெறப்பட உள்ளது. ஆனால் முதல் நாள் ஏலத்தின் சூழ்நிலையைப் பார்க்கும் போதும் 5.6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது.