டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 700 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை மிகவும் அதிகமான உள்ளதால் டெலிகாம் நிறுவனங்கள் ஏலத்தில் வாங்க முன்வரவில்லை.
இதனால் மத்திய அரசு அதன் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. மத்திய தற்போது 1 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைக்கு நிர்ணயம் செய்த விலை 11,485 கோடி ரூபாய், இந்தியா முழுவதும் பயன்படுத்தக்கூடிய 700 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை 5 மெகாஹெட்ஸ் விலை 57,425 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை துவங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மத்திய அரசு மற்றும் டிராய் இணைந்து மொத்தம் 2,354.55 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை ஏலம்விட முடிவு செய்ததது. இந்த ஏலத்தின் மூலம் 5.63 லட்சம் கோடி நிதிதிரட்ட திட்டமிட்டது மத்திய அரசு.
ஆனால் இந்த ஏலத்தில் முக்கியமான 700 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையின் அதிகப்படியான விலை காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் யாரும் இதை வாங்க விரும்பவில்லை. இதன் எதிரொலியாக மத்திய அரசு இதன் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஒரு வார ஏலத்தில் வெறும் 965 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு வெறும் 65,789.12 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.
இந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் 14,244 கோடி ரூபாய், ஐடியா 12,798 கோடி ரூபாய், ஜியோ 13,672 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றை வாங்கியுள்ளது.