இந்தியாவில் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், தனது உயர் அதிகாரிகளின் சம்பளம் மற்றும் இயக்குனர்கள் குழுவில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்துடன் போட்டி போட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம் விஷால் சிக்கா தலைமையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே இந்நிறுவனத்தின் சிஓஓ, சிஎப்ஓ மற்றும் முக்கிய உயர் நிர்வாக அதிகாரிகளின் சம்பளத்தில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.
இயக்குனர் குழு
2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் சூர்யா சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ டி.என். பிராலான்ட் இணைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் தனிப்பட்ட இயக்குனராகத் தனது பணியை ஆக்டோபர் 14, 2016 முதல் துவங்க உள்ளார்.
சிஓஓ பிரவீன் ராவ்
இன்போசிஸ் நிறுவனத்தின் விஷால் சிக்காவிற்கு இணையாக முக்கியப் பொறுப்பு வகிக்கும் சிஓஓ பிரவீன் ராவ்-க்கு வருகிற நவம்பர் 1, 2016 முதல் உறுதி சம்பளமாக 4.62 கோடி ரூபாயும், வேரியபில் பே-வாக 3.88 கோடி ரூபாயை அளிக்க இன்போசிஸ் அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவிற்கு இன்போசிஸ் நிர்வாகக் குழு மற்றும் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பங்குகள்
இதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டில் பிரவீன் ராவ்-வின் செயல்திறன் படி இவருக்கு 27,250 கட்டுப்படுத்தப்பட்ட பங்குகளும், 43,000 இயல்பான பங்குகளும் வழங்கப்படும். இது அடுத்த 4 வருடங்களில் பிரித்து வழங்க திட்டமிட்டுள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.
பிற அதிகாரிகள்
இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான ரங்கநாதன், மோஹித் ஜோஷி, சன்தீப் டட்லானி, ராஜேஷ் கே மூர்த்தி, ரவிகுமார் எஸ், டேவிட் கென்னடி, கிருஷ்ணமூர்த்திச் சங்கர் மற்றும் மணிகந்தா ஏஜிஎஸ் ஆகியோரின் சம்பளத்திலும் மாற்றும் செய்துள்ளது இன்போசிஸ். இந்தப் புதிய சம்பளம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.