டெல்லி: சர்வதேச சந்தையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சிஸ்கோ, தனது இந்திய வர்த்தகத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.
இதன் மூலம் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கியச் சந்தைகளில் இந்தியா 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஸ்மார்ட்சிட்டி மற்றும் டிஜிட்டல் திட்டங்கள், இதனுடன் தனியார் நிறுவனங்களின் நவீனமயமாக்கும் திட்டங்கள் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்ற வந்தது. இதனால் 2016ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 1 பில்லியன் டாலர் அதாவது 6,600 ரூபாய் அளவுகளை எட்டியுள்ளது.
இன்றைய சந்தை மதிப்பில் சிஸ்கோ நிறுவனம் சுமார் 49 பில்லியன் டாலராக மதிப்பிடப்படும் இந்நிறுவனத்தின் இந்திய கிளையில் சுமார் 11,000 பேர் பணியாற்றுகின்றனர். இதன் காரணமாகத் தென் ஆசிய நாடுகளில் மிகமுக்கிய வர்த்தகச் சந்தையாக இந்தியா உள்ளது.
மேலும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக ஊழியர்கள் பணியாற்றும் வர்த்தகப் பிரிவாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வருடத்தில் சிஸ்கோ நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் மட்டும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது என் சிஸ்கோ நிறுவனத்தின் சிஇஓ சக் ராபின்ஸ் பிடிஐ செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
மேலும் இந்தியா அதிகளவில் முதலீடு செய்யவும், புதிய திட்டங்களைக் கைப்பற்றவும் முயற்சிகள் எடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனவும் ராபின்ஸ் குறிப்பிட்டார்.
சிஸ்கோ நிறுவனத்திற்குத் தற்போது அமெரிக்கா, ஜப்பான், சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்நிலையில் அடுத்தச் சில வருடங்களில் இப்பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறும் எனச் சிஸ்கோ நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் தினேஷ் மல்கானி தெரிவித்தார்.