டெல்லி: இந்தியாவில் அடுத்தச் சில மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், மத்திய பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் தேதியை மாற்ற மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டி நிலை இருந்தது.
தற்போது தேர்தல் ஆணையம் எவ்விதமான மறுப்புத் தெரிவிக்காமல் அனுமதி வழங்கியதால் பிப்ரவரி 1 அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலேயே பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
பட்ஜெட்
காலங்காலமாகப் பிப்ரவரி கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்-ஐ முன்கூடியே தாக்கல் செய்தால் நாட்டின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் புதிய மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சகம் முடிவு செய்தது. இதன் படி மத்திய அரசும், நாடாளுமன்றமும் இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது.
பட்ஜெட் அறிக்கை தயாரிப்புக்கான பணிகளை ஏற்கனவே மத்திய அரசும், நிதியமைச்சகமும் துவங்கி விட்ட நிலையில், இந்தப் புதிய மாற்றத்திற்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவைப்படுகிறது. ஏன்..?
5 மாநில தேர்தல்
அடுத்தச் சில மாதத்தில் உத்திர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறும் காலங்களில் பட்ஜெட் அறிவிக்கவும், இதனால் எவ்விதமான தாக்கமும் மாநில தேர்தலில் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி அவசியமாக இருந்தது.
தேர்தல் ஆணையம்
இந்நிலையில் நிதியமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்த அனுமதியைக் கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் மத்திய அரசின் திட்டத்தின் படி எப்போது வேண்டுமானாலும் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யலாம் எனக் கூறியுள்ளது.
இறுதிக்கட்ட முடிவு
புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று பிரதமர் மற்றும் நிதியமைச்சகம் இணைந்து நாடாளுமன்றத்தில் 2017-18ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்யப்படும் நாள்-ஐ தீர்மானிக்க இறுதிக்கட்ட முடிவுகளை எடுக்கும்.
ஜனவரியில் இருந்து பிப்ரவரிக்கு மாற்றம்
மத்திய அரசு முன்பு ஜனவரி மாதத்தின் கடைசியில் பட்ஜெட்-ஐ தாக்கல் செய்யத் திட்டமிட்டது, ஆனால் குடியரசு தின விழா மற்றும் அதற்கான செய்யப்படும் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி மாத துவக்கத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
இதன் மூலம் என்ன லாபம்..?
பிப்ரவரி மாத துவக்கத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்ஜெட் அமலாக்கத்திற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக முடிவடைந்துவிட்டால் அரசு நிறுவனங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்தின் முதலே பயன்படுத்த துவங்கலாம்.
தற்போது நடைமுறையில் இருக்கும் முறையில், மே மாதத்தில் தான் அரசு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறுகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.
மே மாதம்
ஒவ்வொரு நிதியாண்டின் மே மாதத்தின் 2வது வாரத்திற்குள் மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி நிதி சார்ந்த அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் பெற்றப்படும்.
புதிய நடைமுறையில் இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
புதிய அமைப்பு
மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி அளவுகளைத் துறைவாரியாக மதிப்பீடு செய்யப் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் ஆய்வு முடிவுகள் 2016ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் எனவும் அறியப்படுகிறது.