சென்னை: நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெயரில் இருக்கும் 42,000 கோடி கடனை முழுமையாக அடைக்க இந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.
இந்த முடிவின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்குச் சொந்தமான டெலிகாம் டவர்களில் 3இல் இரண்டு பங்கை பூரூக்பீல்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் குரூப்.
இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் டெலிகாம் சேவையில் முன்னணியில் இருக்கும் ஏர்செல் நிறுவனத்தை வாங்க அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இதனால் ஏர்செல்-ஆர்காம் இணைப்பிற்குப் பின் நாட்டின் 4வது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக ஆர்காம் உருவெடுக்க உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அனில் அம்பானி, தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கு சொந்த நிறுவனமான ஜியோ உடன் இணைந்தது தனது மிகழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
கடனைத் தீர்க்கும் அனில் அம்பானி
ஆர்காம் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 42,000 கோடி கடனை தீர்ப்பது தான் எங்களது முக்கியத் திட்டமாகத் தற்போது உள்ளது.
ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு மற்றும் டெலிகாம் டவர் விற்பனைக்குப் பின் ஆர்காம் நிறுவனத்தின் கடன் முழுமையாகத் தீர்க்கப்படும்.
டவர் விற்பனையின் மூலம் நிறுவனத்தின் கடன் அளவு 42,000 கோடியில் இருந்து 15,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. மொத்த டவர்களை விற்பனை செய்திருந்தால் கடன் முழுமையாகத் தீர்க்கப்பட்டு இருக்கும்.
ஏர்செல் இணைப்பிற்குப் பின் இதன் அளவு முழுமையாகக் குறையும் என அனில் அம்பானி உறுதியளித்துள்ளார்.
ஆர்காம்
சில வருடங்களுக்கு முன் ஆர்காம் நிறுவனத்தில் பல பிரச்சனைகள் இருந்தது, வர்த்தகத்தை உயர்த்துவதற்கு அப்போது 2 வழிகள் மட்டுமே இருந்தது. ஒன்று வேறொரு நிறுவனத்தை வாங்குவது அல்லது சந்தை போட்டியில் காணாமல் போவது.
திருபாய் அம்பானி
இத்தகைய சூழ்நிலையில் தான் எனது தந்தை திருபாய் அம்பானி கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தது. அது சந்தையில் வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனத்தை வாங்கி அதன் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவது. அல்லது அண்ணன் நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்வது.
இரு துருவமும் இணைந்தால் சந்தையில் அதன் சக்தியே வேறு என அடிக்கடி எனது தந்தை கூறுவார்.
ஜியோ
ஆர்காம் நிறுவனத்தில் ஜியோ உடன் இணையும் திட்டத்தைப் பற்றி ஆலோசனை செய்யும் போது எங்கள் நிறுவனத்திற்குப் பல புதிய வாய்ப்புகள் இருப்பது தெரிந்தது. இதே சூழ்நிலையில் ஜியோ-விற்கு ஆர்காம் நிறுவனத்தின் சேவை, வாடிக்கையாளர், இன்பார தேவைப்பட்டது.
பங்கீடு
ஆர்காம் நிறுவனத்தின் ஆலோசனை கூட்டத்தின் முடிவின் படி, ஜியோ நிறுவனத்துடன் இணையத் திட்டமிட்டோம். இந்த இணைப்பின் முதற்கட்ட திட்டமாக ஆர்காம் நிறுவனத்திற்குச் சொந்தமான 850 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை இரு நிறுவனங்கள் மத்தியில் பங்கீடு செய்ய ஒப்பந்தம் செய்தோம்.
இதனால் ஆர்காம் நிறுவனத்திற்கு அதிக வருவாய் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடையவும் ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. இதன் எதிரொலியாக நிறுவனத்தின் லாப அளவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வளர்ச்சி
ஜியோ உடன் இணைந்ததன் மூலம் ஆர்காம் நிறுவனத்தின் சேவை மற்றும் அதன் திறன் எதிர்காலத் தேவையை வாடிக்கையாளர்களுக்குப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு உயர்ந்தது.
இதன் மூலம் ஆர்காம் நிறுவன பல பில்லியன் டாலர் செலவுகளைக் குறைத்துள்ளது. இனி நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவையை எளிதாக வழங்க முடியும்.
ஜியோ-விற்கு லாபம்
மத்திய அரசு ரஷ்ய நிறுவனமான சிஸ்டமா ஷியாம் நிறுவனத்திற்கு அளித்த 850 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை 17 ஆண்டு ஒப்பந்தத்திற்கு அளித்தது, சிஸ்டமா ஷியாம் நிறுவனத்தை ஆர்காம் கைப்பற்றியதால், ஜியோ இதனை இலவசமாகப் பயன்படுத்த முடிந்தது.
இதுதான் ஜியோவிற்கு ஜாக்பாட்.
4ஜி சேவை
தற்போது ஜியோ-விடம் வெறும் 4ஜி சேவை அளிப்பதற்கான அலைக்கற்றை மட்டுமே உள்ள நிலையில் ஆர்காம் நிறுவனத்துடனான இணைப்பு 2ஜி,3ஜி, 4ஜி சேவையை அளிக்க முடிந்து.
இதன் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும், அனைத்து விதமான சேவையும் அளிக்கும் வகையில் ஜியோ உள்ளது. இதற்குக் காரணம் ஆர்காம்.
ஏர்செல் இணைப்பு
ஆர்காம் உடன் தற்போது சிஸ்டமா ஷியாம், எம்டிஎஸ், ஆகியவை இணைந்துள்ளது. இதனுடன் ஏர்செல் நிறுவனமும் இணைந்தால் ஆர்காம் இந்தியாவில் டாப் 5 முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் நுழையும்.
ஆர்காம்-ஜியோ தனது சேவை மற்றும் அலைக்கற்றைப் பங்கீடு செய்துள்ளதால் இக்கூட்டணி நிறுவனம் டெலிகாம் சந்தையில் ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடிக்கும்.
மகிழ்ச்சி
இதனாலே முகேஷ் அம்பானியின் 'ஜியோ' நிறுவனத்துடனான உடனான கூட்டணி 'எனக்கு' நன்மையே என்று மகிழ்ச்சி பொங்க அனில் அம்பானி கூறியுள்ளார்.