மும்பை: ஐபிஓ சந்தைக்குச் சிறந்த ஆண்டு என்றால் நடப்பு நிதி ஆண்டு என்று கூறலாம். குட்ரிட்டர்ன்ஸ் தரவின் படி 6 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் குதித்த நிறுவனங்கள் முதலீடுகளை அள்ளியுள்ளன.
புதன் கிழமை மும்பை பங்குச் சந்தையில் வெளியான எண்ட்யூரன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் துவக்க விலையாக இருந்த 472 ரூபாய் 21 சதவீதம் உயர்ந்து 570 ரூபாய்க்கு விற்பனையானது.
2016-2017 ஆம் நிதி ஆண்டில் மட்டும் இது வரை 56 நிறுவனங்கள் 17,283 கோடி ரூபாய் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு 36 நிறுவனங்கள் 4,950 கோடி திரட்தியதை விட இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகமாகத் திரட்டி உள்ளன. 2007-2008 ஆம் ஆண்டு 21,244 கோடி திரட்டியதே அதிகமாக இருந்தது.
சரி, நாம் இப்போது பங்குச் சந்தையில் அடுத்தடுத்து குதிக்க இருக்கும் நிறுவனங்களைப் பற்றி இங்குப் பார்ப்போம்.
வருண் பீவரேஜஸ்
வருண் பீவரேஜஸ் நிறுவனத்தின் ஐபிஓ அக்டோபர் 26 முதல் 28 தேதி வரை பொது மக்களுக்காகத் திறந்த இருக்கும் என்றும் பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி முதல் பங்குச் சந்தையில் வர்த்தகத்தைத் துவங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் துவக்கத்தில் 440 ரூபாய் முதல் 445 ரூபாய் விலை முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 165 மில்லியன் டாலர் முதல் 167 மில்லியன் டாலர் வரை நிதி திரட்ட இருப்பதாகவும் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வருண் பீவரேஜஸ் பெப்ஸி கோ நிறுவனத்தின் இந்திய விற்பனை உரிமையைளர் நிறுவனம் ஆகும்.
பிஎன்பி ஹவுஸிங் ஃபினான்ஸ்
3000 கோடியைத் திரட்டுவதற்கான பிஎன்பி ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அக்டோபர் 25 முதல் தங்களது பங்குகளை விற்கத் துவங்குகிறது. முதல் வெளியீடு அக்டோபர் 27 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் துவக்க பங்கு விலை 750 ரூபாய் முதல் 775 ரூபாயாக இருக்கும். இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஹவுஸிங் ஃபினான்ஸ் நிறுவனம் பிஎன்பி என்பது குறிப்பிடத்தக்கது.
டிமார்ட்
டிமார்ட் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தை நடத்தி வரும் அவின்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
1,800 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட அவின்யூ முடிவு செய்துள்ளதாகவும் பங்குகளின் விலை மற்றும் எப்போது முதல் சந்தைக்கு வரும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மும்பை பங்கு சந்தை
மும்பை பங்குச் சந்தை நிறுவனம் தனது நிறுவனத்தின் முதல் ஐபிஓ பங்குகளை இந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
141 வருடப் பழைய நிறுவனமான பிஎஸ்ஈ 9000 பங்குதாரர்களுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.