மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விழாக்காலச் சலுகையாக, தனது முக்கிய வர்த்தகச் சேவையான வீட்டுக் கடனில், வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி அனைத்துக் கடன் திட்டத்திலும் 0.15% அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைத்த நிலையில் வீட்டுக்கடன் திட்டத்தின் வட்டி விகிதம் 6 வருட சரிவை எட்டியுள்ளது.
வீட்டுக் கடன்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள விழாக்காலச் சலுகை திட்டத்தில் பெண்களுக்களுக்கான வீட்டுக் கடனுக்கு 9.10 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. பிற அனைவருக்கும் 9.15 சதவீத வட்டியுடன் வீட்டுக் கடன் வழங்கப்படும் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகை திட்டம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
பிற கட்டணங்கள்
விழாக்காலச் சலுகை திட்டத்தின் மூலம் ஸ்டேட் பாங்க் ஆஃப் வீட்டுக் கடனில் சில சதவீதம் வட்டி விகிதம் குறைந்ததுடன் செயற்பாட்டுக் கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்துள்ளது இதன் மூலம் வீட்டுக் கடன் வாங்க விரும்புவோர் டிசம்பர் மாதத்திற்குள் வாங்கிக்கொள்ளலாம்.
ஈஎம்ஐ
வீட்டுக் கடன் திட்டத்தில் தற்போது குறைத்துள்ள வட்டி விகிதத்தின் மூலம் 50 லட்சம் ரூபாய் கடனுக்கு மாத ஈஎம்ஐ 542 ரூபாய் குறையும். கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் ஈஎம்ஐ அளவு சுமார் 1,500 ரூபாய் வரை குறைந்துள்ளது.
முன்னணி வங்கிகள்
வங்கி சேவையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎம்சி ஆகியவற்றை ஒப்பிடுகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் சுமார் 0.20 சதவீதம் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கிறது.
எஸ்பிஐ வங்கியின் விழாக்காலச் சலுகை திட்ட அறிவிப்பின் மூலம் பிற வங்கிகளும் தங்களது வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புகள் உண்டு.
வங்கி துறை
இந்திய வங்கிகள் கடந்த சில மாதங்களாக மிகவும் குறைவான கடன் வர்த்தகத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் வங்கிகளின் லாப அளவுகள் அதிகளவில் குறைந்தது.
இத்தகைய தருணத்தில் தான் ஆர்பிஐ-யின் ரகுராம் ராஜன் பதவி விலக, உர்ஜித் பட்டேல் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். உர்ஜித் தலைமையிலான முதல் நாணய கொள்கை திட்டத்திலேயே வணிக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தார்.
ரிசர்வ் வங்கியின் முடிவு வங்கிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இந்த வாய்ப்பை தற்போது சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளது.