பல ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் ஆதிக்கத்தைக் குறைக்கப் பிளிக்கார்ட் தனது நிறுவனத்தின் வளர்ச்சி பணிகளுக்காகவும், வர்த்தக விரிவாக்கத்திற்காகவும் உலகின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்தக் கூட்டணி பிளிக்கார்ட் நிறுவனத்திற்கு லாபமா..? நஷ்டமா..?
பிளிப்கார்ட் நிறுவனம்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்து வரும் பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகவே நிதி தேவைக்காகச் சில முக்கிய நிறுவனங்களை நாடி இருந்தது.
இந்தத் திடீர் முதலீட்டுத் தேவைக்குக் காரணம் டைகர் குளோபல் நிறுவனத்தின் தலையீடு தான். தற்போதைய நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் அதிகளவிலான முதலீட்டை, டைகர் குளோபல் என்னும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம் செய்துள்ளது. இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாக மட்டத்தில் அதிகளவிலான குடைச்சலை அளித்து வந்தது.
இதனைச் சமாளிக்கும் விதமாகவும், வர்த்தக வளர்ச்சிக்கான நிதி தேவைக்கும் புதிய முதலீட்டாளர்களைத் தேடி வந்தது பிளிப்கார்ட் நிர்வாகம்.
முயற்சிகள்
இந்தியாவில் அமேசான் நிறுவனம் தனது வர்த்தகத்தைத் துவங்கிய சில மாதங்களிலேயே அதிகளவிலான வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற்றது. இது பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் தான் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பை மோர்கன் ஸ்டான்லி பாதியாகக் குறைத்து. இதன் பின் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ-வான சச்சின் பன்சாலின் பதவி தனது முதலீட்டாளர்களால் பறிக்கப்பட்டது.
புதிய முதலீடும்.. நிறுவனங்களும்..
இந்தப் பிரச்சனை அனைத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புதிய முதலீட்டாளர்களைத் தேடி அலைந்தது பிளிப்கார்ட்.
அந்த நேரத்தில் தான் கனடா பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு நிறுவனம் (CPPIB) இந்தியாவில் தனது கிளையைத் துவங்கியது. இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிதி தேவையைப் பூர்த்திச் செய்ய CPPIB நிறுவனமும், அமேசானின் வர்த்தகப் போட்டியை சமாளிக்க உலகின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது.
பேச்சுவார்த்தை..
பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் பிளிப்கார்ட் நிறுவனம் 1 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெறும்.
கனடா பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு
2015ஆம் ஆண்டு இந்தியாவில் அலுவலகத்தைத் துவங்கிய கனடா பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு இதுவரை இந்திய சந்தையில் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் முதலீட்டுப் பட்டியலில் கோட்டாக் மஹிந்திரா வங்கி, எல்அண்ட்டி இன்பார, பிராமல் எண்டர்பிரைசர்ஸ் மற்றும் ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமம் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.
வால்மார்ட் உடன் கூட்டணி
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் வால்மார்ட் நிறுவனம் வெளிப்படையாகவோ அல்லது முதலீட்டின் வாயிலாக மறைமுகமாகவோ வர்த்தகம் செய்து வருகிறது.
பிளிப்கார்ட் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையில் வால்மார்ட் நிறுவனத்திற்குத் தனது நிறுனவனத்தின் ஒரு பகுதியில் முதலீடு செய்யக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் பிளிப்கார்ட் முதலீட்டாளர்களில் இனி வால்மார்ட் நிறுவனமும் முக்கிய இடத்தைப் பெறும்.
போட்டி
வால்மார்ட் நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் இந்தியாவில் அமேசான் மட்டும் அல்லாமல் பேடிஎம் வாயிலாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள அலிபாபா-வின் வர்த்தக வளர்ச்சியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது பிளிப்கார்ட்.
அன்னிய முதலீடு
மத்திய அரசு ரீடைல் வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விதிகளைத் தளர்வு செய்ததில் துவங்கி வால்மார்ட் நிறுவனம் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய முடிவு..!
தற்போதைய நிலையில் வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வது ஏறத்தாழ முடிவான நிலையில் முதலீடு மட்டும் செய்கிறதா அல்ல வர்த்தகத்தில் பங்கு பெறுகிறதா என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
13வது முறை..
ஜூலை 2015ஆம் ஆண்டில் இருந்து பிளிப்கார்ட் சுமார் 13 முறை முதலீட்டைத் திரட்டியுள்ளது. கடந்த 7 வருடத்தில் சுமார் 3.2 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது பிளிப்கார்ட்.
சரிவு..
கடந்த 12 மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் வர்த்தகம் மற்றும் வருவாய் வளர்ச்சியை அடையத் தவறும் காரணத்தால் தனது சொந்த முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் பிளிப்கார்ட் நிறுவன மதிப்பை 15 பில்லியன் டாலரில் இருந்து 11 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
அமேசான்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் சகபோட்டி நிறுவனமான அமேசான் தனது இந்திய வர்த்தகத்தைத் துவங்கி 4 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை 5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
லாபமா..? நஷ்டமா..?
பிளிப்கார்ட் நிறுவனத்தில் வால்மார்ட் முதலீடு செய்வதன் மூலம் அதன் வர்த்தக வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புதிய கூட்டணி மூலம் அமேசான், அலிபாபா, ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்களின் வர்த்தக ஆதிக்கத்தை அதிகளவில் குறைக்க முடியும்.
ஆனால் வால்மார்ட் இந்திய ரீலைட் சந்தையில் நுழைந்தது மட்டும் இல்லாமல் தற்போது ஈகாமர்ஸ் துறையிலும் நுழைவதால் ரீடைல் சந்தையில் இருக்கும் வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.