இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த சில நொடி முதல், மக்கள் அனைத்து இடங்களிலும் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் பாதிப்படைய துவங்கினர். இதனால் புதிய 2000 ரூபாய் தாள்களைப் பெற வங்கிகளிலும், 100 ரூபாய் தாள்களைப் பெற ஏடிஎம் வாசலிலும் காத்துக்கிடந்தனர்.
ஏடிஎம் கார்டை ஒரு மாதத்திற்கு 3 முறைக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் பயன்பாட்டுக் கட்டணத்தை விதிக்கும் வங்கிகள் இதன் மூலம் அதிகளவிலான வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ரிசர்வ் வங்கி ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆர்பிஐ அறிவிப்பு
மக்கள் அனைவரும் எவ்வளவு பணம் கட்டணமாகப் போனாலும் சரி, செலவிற்காகப் பணம் வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காக ஏடிஎம்களில் பணத்தை எடுத்து வருகின்றனர்.
மக்கள் பணத்திற்காகத் தவித்துக்கொண்டு இருக்கும் இத்தகைய சூழ்நிலையில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலத்திற்குச் செய்யப்படும் அனைத்து ஏடிஎம் கார்டு வாயிலான பரிமாற்றங்களுக்கு எவ்விதமான கட்டணமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏடிஎம் இயந்திரங்கள்
தற்போதைய நிலையில் இந்தியாவில் இருக்கும் 2,18,542 ஏடிஎம் இயந்திரங்களில் பாதி மட்டுமே முழுமையாக இயங்கி வருகிறது. மீதமுள்ள அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டை வைப்பதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
காரணம் 2000 ரூபாய் நோட்டின் வடிவம் மிகவும் சிறியது.
பரிமாற்றம் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு
சில மாதங்களுக்கு முன்பு வங்கி ஏடிஎம் பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
அதில் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களுரூ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருக்கும் மக்கள் மாதத்திற்கு இலவசமாக 3 முறையும். நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் மக்கள் 5 முறையும் இலவசமாகப் பரிமாற்றம் செய்ய வங்கிகள் தங்களின் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
கட்டணம்
இலவச முறைகளுக்கு அதிகமாகப் பரிமாற்றம் செய்யாவோருக்குக் கூடுதலாகச் செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 20 ரூபாய் கட்டணத்தை வசூல் செய்யப்போவதாக வங்கிகள் அமைப்புத் தெரிவித்தது.
டிசம்பர் 30 வரை
இந்நிலையில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் செய்யப்படும் அனைத்துப் பணப் பரிமாற்றமும் முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
என்பிசிஐ
மேலும் இந்திய தேசிய பரிமாற்றம் அமைப்பும் ஸ்விச்சிங் கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.