மோடி அறிவிப்பால் தீவிரவாதங்கள் குறைந்தது..!
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் அதிகப்புடைய இரு நாணயங்களான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்த நால் முதல் எல்லை பகுதிகளிலும் சரி, மாவோயிஸ்ட் மூலமாகவும் சரி தாக்குதல் மற்றும் தீவிரவாத செயல்கள் குறைந்துள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் உளவுத்துறையும் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதிகளும் முழுமையாகத் தடைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
#Modi #Terrorism
அடையாள அட்டையின் ஜெராக்ஸ் தேவையில்லை: ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி மற்றும் வணிக வங்கிகளின் தலைமை அலுவலங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் மக்களிடம் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் காப்பிக் கேட்பதில்லை, ஆனால் கிளை வங்கிகளில் ஜெராக்ஸ் காப்பியை கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வங்கிகளில் பணத்தை மாற்ற வரும் மக்கள் தங்களது உண்மையான அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதுமெனத் தெரிவித்துள்ளது. அடையாள அட்டையின் நகல் அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியை பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரியும் உறுதி செய்துள்ளார்.
எனவே மக்கள் தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளில் பணத்தை மாற்றச் செல்லும்போது அடையாள அட்டையின் ஜெராக்ஸ் அளிக்க வேண்டாம். உங்கள் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும்.
#Xerox #bank #1000Rupee #500Rupee
ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் அதீத வளர்ச்சி..!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறோம் என்றும் எத்தனை பேருக்கு தெரியும்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் 11 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.
இக்காலகட்டத்தில் இந்திய 32.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் முதல் முறையாக 30 மில்லியன் அளவை எட்டியுள்ளது இந்தியா.
#Smartphone #Export
எங்களுடைய 95% ஏடிஎம்கள் இயங்குகிறது: எஸ்பிஐ அறிவிப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் 95 சதவீதம் முழுமையாக இயங்குகிறது.
இதில் 140 ஏடிஎம் இயந்திரங்கள் புதிய 2000 ரூபாய் நோட்களை அளிக்கும் வண்ணம் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது என் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ மற்றும் அதன் 5 கிளை வங்கிகளையும் இணைத்து சுமார் 55,000 ஏடிஎம்கள் இந்தியா முழுவதும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
#SBI #ATM
சென்னையில் தயாரிக்கப்பட்ட போர்டு எக்கோஸ்போர்ட் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி..!
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு, தனது சென்னை தொழிற்சாலையில் தாயாரிக்கப்படும் எக்கோஸ்போர்ட் எஸ்யுவி வாகனத்தை அமெரிக்க வர்த்தக சந்தைக்கு அனுப்ப உள்ளது.
இதன் அறிமுக விழா திங்கட்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடத்த ஆட்டோ ஷோவில் நிகழ்ந்தது. இந்த ஏற்றுமதியின் மூலம் போர்டு நிறுவனத்திற்கு புதிய வர்த்தக சந்தை கிடைத்தது மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு அதிகளவிலான ஏற்றுமதி வர்த்தகம் கிடைக்கும்.
#Ford #EcoSport #USA
சைரஸ் மிஸ்திரி-க்குப் பை பை சொன்னது டாடா குளோபல் பிவெரேஜஸ்..!
டாடா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான டாடா குளோபல் பிவெரேஜஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை டாடா சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் டாடா குளோபல் பிவெரேஜஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ஹரீஷ் பட் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை மிஸ்திரி ஆதரவாளர்களான டாரிஸ் பன்டோல் மற்றும் அலன்ஜிஸ் சிங் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
#Tata #CyrusMistry
வர்த்தகப் பற்றாக்குறை 10.16 பில்லியன் டாலராக உயர்வு..!
அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி 108.43 சதவீதம் அதிகரித்துள்ளதால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 9.69 பில்லியன் டாலரில் இருந்து 10.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் இந்தியாவில் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது..
#TradeDeficit #Import #Export
மிஸ்திரி உடனான பிரச்சனையைத் தீர்க்க ரத்தன் டாடா நிதியமைச்சர் உடன் சந்திப்பு..!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான சைரஸ் மிஸ்திரி வெளியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க நிதியமைச்சர் அருண் ஜேட்லி-வை சந்தித்தார்.
100 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறித்து ரத்தன் டாடா பிரதமர் மோடிக்குக் கடிதமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Mistry #Tata #ArunJaitely
ஏற்றுமதி அளவில் உயர்வு..!
இந்தியாவில் பல மாதங்களாக ஏற்றுமதி வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் ஏற்றுமதி வர்த்தகம் 9.59 சதவீதம் அதிகரித்து 23.51 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதேக்காலக்கட்டத்தில் இறக்குமதி அளவு 8.11 சதவீத உயர்வில் 33.67 பில்லியன் டாலரை எட்டியது.
#Export
மொத்த விலை பணவீக்கம் 3.39%ஆகச் சரிவு..!
2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறைந்துள்ளதால் மொத்த விலை பணவீக்கம் 3.39 சதவீதம் குறைந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு 3.57 சதவீதமாகவும், 2015ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் -3.70 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
#WPI #Inflation
8 வருட சரிவில் சீன யுவான் நாணயம்..!
அமெரிக்க சந்தையால் ஆசிய நாடுகளின் பங்குச்சந்தை மற்றும் நாணய மதிப்பு அதிகளவில் சரிந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான சீன யுவான் நாணயத்தின் மதிப்பு புதன்கிழமை வர்த்தகத்தில் 8 வருட சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான சீன நாணயத்தின் மதிப்பு 6.8495 ஆக உள்ளது. செவ்வாய்கிழமை இதன் மதிப்பு 6.8291ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
#USD #China #Yuan