இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் சேவையை மட்டும் அளித்த வந்த பேடிஎம் நிறுவனம் இன்று இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சென்றுள்ளது.
இந்நிலையில் தனது பேமெண்ட் வங்கி சேவை நிறுவனத்தில் பங்கு விற்பனையின் மூலம் கிடைத்த 325 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய விரிவாக்கப் பணிகளில் இறங்கியுள்ளார் பேடிஎம் நிறுவனத்தின் தலைவரான விஜய் சேகர் ஷர்மா.
பேடிஎம்
இந்நிறுவனத்தின் துவக்கத்தில் வெறும் மொபைல் ரீசார்ஜ், டிசிஎச் பேமெண்ட் சேவை மட்டும் அளித்து வந்த நிலையில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பின் மூலம் பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட், மின் கட்டணம் எனப் பல சேவைகளை அறிமுகம் செய்து இந்திய ஆன்லைன் வர்த்தகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தார்.
அலிபாபா
இந்நிலையில் சீன நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா பேடிஎம் நிறுவனத்தில் மிகப்பெரிய முதலீடு செய்த பின் பேடிஎம் ஈகாமர்ஸ் வர்த்தகத்தையும் துவங்கியது.
மோடி அறிவிப்பு
இந்நிலையில் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை பேடிஎம் புதிதாகத் துவங்கியுள்ள பேமெண்ட் சேவை வர்த்தகத்திற்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இன்றளவில் நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்டி கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல் பேடிஎம் நிறுவனத்தின் பணப் பரிமாற்ற சேவையைப் பயன்படுத்தி வருகிறது. நாட்டின் நிலவும் பணத் தட்டுப்பாடு பேடிஎம் நிறுவனத்தால் நாட்டின் சில பகுதிகளில் குறைந்துள்ளது என்றால் மிகையாகாது.
விரிவாக்கம்
இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் பேமெண்ட் வங்கி சேவையின் அடுத்தகட்ட விரிவாக்க பணிகளுக்குகாக இந்நிறுவனத்தின் தலைவரான விஜய் சேகர் ஷர்மா, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் 1 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
1 சதவீத பங்குகள்
ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்தில் விஜய் சேகர் ஷர்மாவிற்குச் சொந்தமாக இருக்கும் 21.33 சதவீத பங்குகிளில் 1 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பேடிஎம் நிறுவனம் 325 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
இதனை முழுவதுமாகப் பேமெண்ட் வங்கி சேவையின் விரிவாக்கப் பணிகளுக்காகப் பயன்படுத்த உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.