டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்தால் 1 கோடி பரிசு என்று நிதி ஆயோக் அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்காக நிதி ஆயோக் யோஜனா மற்றும் டிஜி-தன் வியாபாரி யோஜானா என்ற இரு திட்டங்களை நிதி ஆயோக் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 50 ரூபாய்க்கு அதிகமாகவும் 3,000 ரூபாய்க்கும் உட்பட்டும் தினமும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை நீங்கள் செய்து வந்தால் நீங்களும் இந்தப் பரிசை வெல்லலாம்.
இதேப் போன்று வியாபாரிகளும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் 50 லட்சம் வரை பரிசு பெற இயலும்.
340 கோடி ரூபாய் பரிசு திட்டம்
இந்த நிகழ்வுக்காக 340 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று பதிப்பிடப்பட்டுள்ளதாகவும். பரிசுகள் தினசரி, வாரா வாரம் மற்றும் மெகா பரிசு எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மெகா பரிசு 2017, ஏப்ரல் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான அதிர்ஷ்ட திட்டம்
வாடிக்கையாளர்களுக்கான அதிர்ஷ்ட திட்டத்தின் மூலம் 1 கோடி, 50 லட்சம் மற்றும் 25 லட்சம் எனப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வியாபாரிகளுக்கான அதிர்ஷ்ட திட்டம்
வியாபாரிகளுக்கான திட்டத்தின் மூலம் 50 லட்சம், 25 லட்சம் மற்றும் 5 லட்சம் எனப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரிசுகளை யார் அறிவிப்பார்கள்
நிதி ஆயோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்த் இதற்கான பரிசுகளை அடுத்து 100 நாட்களுக்கு அறிவிப்பார் என்றும், மொத்தம் 15,000 பரிசுகள் உள்ளன என்றும் டிசம்பர் 25-ம் தேதி முதல் அதிர்ஷ்ட திட்டம் துவங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
எப்போது முதல் இந்த அதிர்ஷ்ட திட்டங்கள் துவங்கப்படும்
வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 8-ம் தேதி முதல் அவர்கள் செய்த பண பரிவர்த்தனையை பொருத்து கணக்கில் கொள்ளப்படும் என்றும் ஆனால் வியாபாரிகளுக்கு டிசம்பர் 25 முதல் கணக்கில் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் சில வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்குத் தனி ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று காந்த் அறிவித்துள்ளார்.
பரிவர்த்தனையை எதன் மூலம் செய்தால் பரிசு?
ரூபே, யூபிஐ மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை அமைப்புகள் மூலம் செய்யும் பரிவர்த்தனைக்கு இத்திட்டத்தின் மூலம் பரிசு கிடைக்கும்.
யாருக்கெல்லாம் பரிசு கிடையாது?
3000 ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, 50 ரூபாய்க்குக் குறைவாக பரிவத்தனை செய்பவர்களுக்கும் பரிசு வழங்கப்படமாட்டாது. ஒரு நபர் இன்னொருவருக்குச் செய்யும் பரிவர்த்தனைக்கு கிடையாது. கிரெடிட் கார்டுகள் மற்றும் இ-வாலெட்டுகள் மூலம் செய்யும் பரிவத்தனைகளுக்குப் பரிசு கிடையாது.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பரிசு ஏழை, நடுத்தர குடும்பம் மற்றும் வியாபாரிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் காந்த தெரிவித்துள்ளார்.