இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கடந்த சில வருடங்களாகத் தனது வர்த்தகத்தை வெளிநாடுகளில் வரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகப் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசிஎஸ் தனது வர்த்தகத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் துவங்கியது. இந்நாட்டில் வர்த்தகம் துவங்கி 8 வருடம் ஆனாலும் ஊழியர்கள் எண்ணிக்கையும் சரி வர்த்தகமும் சரி பெரிய அளவில் உயரவில்லை.
ஆனால் இப்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் அலுவலகத்தில் புதிதாக 6000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்.
பிலிப்பைன்ஸ்
டிசிஎஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை வழங்க வேண்டும் என்ற நோக்குடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
6000 ஊழியர்கள்
இதன்படி வெறும் 4,000 ஆக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை 10,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவிற்குக் காரணம் அதன் வளர்ச்சிதான்
40 சதவீத வளர்ச்சி
பிலிப்பைன்ஸ் நாட்டில் 2008ஆம் ஆண்டுத் தனது வர்த்தகத்தைத் துவங்கிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவிற்கு வெளியில் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வரும் ஒரு சந்தையாக விளங்குகிறது.
குறிப்பாகக் கடந்த 3 வருடத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் சந்தை வர்த்தகம் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
2012ஆம் ஆண்டில் வெறும் 400 பேர் கொண்ட சந்தையாக இருந்த பிலிப்பைன்ஸ், 2016ஆம் ஆண்டின் முடிவில் 4,000 ஊழியர்கள் கொண்ட சந்தையாக உருவெடுத்துள்ள நிலையில் தற்போது அதன் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் புதிதாக 6000 ஊழியர்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் வாயிலாக இச்சந்தையின் ஊழியர்கள் எண்ணிக்கை 10,000ஆக உயர உள்ளது.
பிலிப்பைன்ஸ் சந்தை
பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டெலிவரி சென்டர்கள் உள்ளது. தற்போது 7வதாக ஒன்றைத் திறக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இப்பிரிவில் இருந்து டிசிஎஸ் நிறுவனம் சுமார் 30 வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது.
வாடிக்கையாளர் சேவை மையம்
துவக்கத்தில் வெறும் பிபிஓ சேவைக்காக மட்டுமே பிலிப்பைன்ஸ் நாட்டில் வர்த்தகத்தைத் துவங்கிய டிசிஎஸ், பின் நாட்களில் தனது முடிவுகளை மாற்றியது.
இதன் வாயிலாகத் தற்போது இந்நாட்டு வர்த்தகத்தில் 70 சதவீத வருவாய் பிபிஓ சேவையில் இருந்தும், 30 சதவீத வருவாய் ஐடி மற்றும் ஐடி இன்பரா சேவையில் இருந்தும் கிடைக்கிறது.
விக்ரம் சிங்
டிசிஎஸ் நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் நாட்டின் வர்த்தகத்திற்குத் தலைவராக விக்ரம் சிங் உள்ளார்.