உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் திட்டங்களும் செயல்பாடுகளும் ஆரம்பம் முதல் இந்திய நிறுவனங்களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் வகையிலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் மீது டொனால்டு டிரம்ப்க்குத் தனிப்பட்ட முறையில் கவனித்து வருவதாகவும் கருத்துகள் நிலவி வருகிறது.
இவை அனைத்திற்கும் காரணம் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பைப் பறித்து மறைமுகமாக இந்தியர்களுக்கு வழங்கி வருவதாக டிரம்ப் கூறிவருகிறார்.
இந்நிலையில் டிரம்பின் 'Buy American, Hire American' முழக்கத்தில் ஐடி நிறுவனங்களும் அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியான நிலையில், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளைத் துவக்கத்திலேயே குறைக்கவும் நாஸ்காம் முடிவு செய்துள்ளது.
நாஸ்காம்
இந்திய ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம், அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியத்தையும் உணர்த்த அமெரிக்காவில் தற்போது அமைந்துள்ள புதிய அரசிடம் நேரடியாகச் சென்று உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
அவசியம்
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருக்கும் திறன்வாய்ந்த ஊழியர்களில் பெரும் பகுதியினர் இந்தியர்கள், அவர்களை நீக்கிவீட்டால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அது தடையாக அமையும்.
மேலும் இத்துறை சார்ந்த திறன்வாய்ந்த ஊழியர்கள் அமெரிக்காவில் இல்லாத காரணத்தினாலேயே இந்திய ஐடி நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து பணியாளர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது என்று நாஸ்காம் கூறியுள்ளது.
உலகச் சந்தை
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய ஐடி நிறுவனங்கள் அளிக்கப்படும் திறன்வாய்ந்த மென்பொருள் உதவியின் வாயிலாகவே சர்வதேச சந்தைக்குத் தனது வர்த்தகத்தை அமெரிக்க நிறுவனங்கள் கொண்டு செல்கிறது.
வேலைவாய்ப்பு
இந்நிலையில் வேலைவாய்ப்பு உருவாக்குவது என்பது அமெரிக்க நிறுவனங்கள், கார்ப்ரேட் மத்தியில் மட்டுமே உள்ளது. இதுவே அமெரிக்காவிற்குத் தற்போது இருக்கும் சிறந்த வழி. பிற நாட்டு நிறுவனங்கள் அளித்துள்ள வேலைவாய்ப்புகளைப் பறித்து அமெரிக்கர்களும் கொடுப்பதன் மூலம் இந்நாட்டின் நிறுவனகங்களின் திறன் வெளிப்பாடுகள் குறையும் என்று நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
60 சதவீத வர்த்தகம்
150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ள இந்திய ஐடி துறை, அமெரிக்காவில் மட்டும் 108 பில்லியன் டாலர் வர்த்தகம் அதாவது 60 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளது.
குறைந்த காலப் பாதிப்பு
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்குப் பொருளாதார ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் பல இணைப்புகள் உண்டு. இப்புதிய அரசால் இந்தியா ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் லாப அளவுகள் பாதிக்கப்பட்டாலும் அது குறுகிய காலம் மட்டுமே, சில மாதங்களில் ஐடித்துறை வளர்ச்சி அடையத் துவங்கும் என்று இன்போ எட்ஜ் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தானி தெரிவித்துள்ளார்.
20 பேர் மட்டுமே
இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இக்குறுகிய காலப் பிரச்சனையைத் தீர்க்க அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டது. இதற்காக 4000 ஊழியர்கள் நேர்முகத் தேர்வு செய்த நிறுவனங்கள் வெறும் 20பேரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது.
இதுவே அமெரிக்கச் சந்தையில் இருக்கும் ஊழியர்களின் திறன் நிலைப்பாடு என் நாஸ்காம் அறிக்கையைச் சுட்டிக்காட்டினார் சஞ்சீவ்.
வளர்ச்சி
அமெரிக்க வேலைவாய்ப்பு துறையின் 2015ஆம் ஆண்டுக் கணிப்புகளின் படி 2014-2024ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு சுமார் 12 சதவீதம் வரை உயரும் எனத் தெரிவித்துள்ளது.
STEM வேலைவாய்ப்புகள்
அமெரிக்கக் கல்லூரிகளில் STEM படிப்புகளில் படிக்கும் 50 சதவீதபேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களைப் பணியில் அமர்த்தினாலும் நிறுவனங்கள் விசா பிரச்சனையைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் அமெரிக்க அரசு விசா அளிக்கும் முறையில் மாற்றங்களைச் செய்தாலும் வர்த்தக ரீதியில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என நாஸ்காம் தலைவர் கூறியுள்ளார்.
கணிப்புகள்
ஆனால் டிரம்ப் தலைமையிலான அரசு விசா அளிக்கும் முறையில் உறுதியாக நின்றால் அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைப்பது சந்தேகம் தான்.
4 லட்ச வேலைவாய்ப்புகள்
2015ஆம் ஆண்டில் அமெரிக்க ஐடி துறையில் சுமார் 4 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிறுவனங்கள்
அமெரிக்க அரசு தற்போது செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படும் விசா விதிமுறைகள் அனைத்தும் 50 சதவீத நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டாலும், இந்த 50 சதவீதத்தில் இந்திய நிறுவனங்கள் அனைத்தும் அடங்கும் வகையில் திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஆர்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
வரியும் முதலீடும்...
2011-13ஆம் ஆண்டுகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது. அதேபோல் 2011-15ஆம் ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் வரியாக அமெரிக்க அரசுக்குச் செலுத்தியுள்ளது.
பாதிப்பு
இத்தகைய வரி வருமானம் கொண்ட துறையில் விசா கட்டுப்பாடுகள், அதீத வரி விதிப்பு போன்றவற்றை விதித்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இதன் வாயிலாக அமெரிக்காவும் தனது வரி வருமானத்தையும் இழக்கும் என்று நாஸ்காம் தலைவர் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
நாஸ்காம் தலைமையிலான குழு மேலே குறிப்பிட்ட அனைத்துக் கருத்துக்களையும் புதிய அரசிடம் எடுத்துரைக்க உள்ளது. மேலும் இக்குழுவிற்கு அனைத்துச் சாதகமான வாய்ப்புகளையும் ஒத்துழைப்பையும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.