மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி 2016ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 4,500 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது.
இக்காலாண்டில் எச்டிஎப்சி வங்கியின் வருமானத்தின் அளவு 18 வருடச் சரிவை எட்டியுள்ள நிலையில், செலவுகளை அதிகளவில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இவ்வங்கியில் பல மாற்றங்களைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஆபத்துக் காத்துக்கொண்டு இருக்கிறது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இந்தியாவில் எந்தொரு வங்கியும் செய்ய அளவிற்கு ஒரே காலாண்டில் 4,500 ஊழியர்களை வெளியேறியுள்ளது மட்டும் அல்லாமல் புதிதாகப் பணியாளர்களை அமர்த்தும் எண்ணிக்கையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது எச்டிஎப்சி வங்கி.
பணமதிப்பிழப்பு
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் இயல்பான வளர்ச்சி அளவை எட்ட இன்னும் பல மாதங்கள் ஆகும் எனக் கணித்துள்ள எச்டிஎப்சி வங்கி, இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு தனது வங்கி செயல்பாட்டில் பல பணிகளை ஆட்டோமேஷன் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக ஊழியர்களின் தேவையும், நிறுவனத்தின் செலவினங்களும் குறைந்துவிடும் எனக் கணித்துள்ளது எச்டிஎப்சி வங்கி.
பதில்
4,500 ஊழியர்களின் வெளியேற்றத்தில் முழுமையாக வங்கி நிர்வாகம் காரணம் இல்லை, இயல்பான ஊழியர்களின் வெளியேற்றமும் இதில் அடங்கும். மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த புதிய ஊழியர்களின் சேர்ப்பை குறைத்துள்ளோம் என்று எச்டிஎப்சி தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
செப்டம்பர் காலாண்டில் 95,002 ஆக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டில் 90,421 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் எச்டிஎப்சி வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளது.
ஐடி மட்டும் அல்ல
இந்தியாவில் ஐடி துறை மட்டும் அல்லாமல் ஐடி துறை சேவைகளைப் பயன்படுத்தும் பிற துறைகளும் ஆட்டோமேஷனில் இறங்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பளம் மற்றும் செலவுகளைக் குறைக்க முடியும்.