இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான ரயில்வே துறையில், இனி பயணிகள் டிக்கெட் தொகையில் சலுகையைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
92 வருடங்கள்
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும் 92 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் சேர்த்து ஒற்றை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
50 பிரிவுகள்
இந்திய ரயில்வே துறை 50க்கு மேற்பட்ட பிரிவுகளில் அதாவது மூத்த குடிமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள், வேலையில்லாதோர், அர்ஜூனா விருது பெற்றவர்கள் எனப் பல பரிவுகளின் கீழ் பயணச்சீட்டுகளில் சலுகைகளை வழங்கி வருகிறது.
ஆதார் அட்டை
இச்சலுகையைப் பெற இனி பயணிகள் கட்டாயமாக ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சலுகையை முறைகேடாகப் பயன்படுத்துவது குறையும், மேலும் சரியான நபருக்கு மத்திய அரசின் சலுகைகளைச் சேர்க்க முடியும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சோதனை
தற்போது இத்திட்டத்தின் பணிகளை மூத்த குடிமக்கள் வாயிலாக இந்திய ரயில்வே துறை பரிசோதனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
1,600 கோடி ரூபாய்
2015-16 நிதியாண்டில் சலுகைகள் பெற்ற டிக்கெட் தொகை மட்டும் 1,600 கோடி ரூபாய் என்ற புள்ளிவிவரத்தையும் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு இதுவரை சுமார் 100 கோடி பேருக்கு ஆதார் அட்டையை வழங்கியுள்ளது. இதனால் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவதில் மூலம் எவ்விதமான இடர்பாடுகளும் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்புகள் 2017-18 பட்ஜெட் அறிக்கையில் பார்க்கலாம்.