டெல்லி: தென்னிந்தியா மற்றும் தமிழகத்தைத் தலைமையாகக் கொண்டு இந்தியாவின் ஒரே டெலிகாம் நிறுவனமான ஏர்செல் மீதான தொடர் வழக்குகளால் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி சோகத்தில் மூழ்கியுள்ளார்.
ஏர்செல் மீதான வழக்குகள் மூலம் அனில் அம்பானிக்கு என்ன பிரச்சனை..?
ஆர்காம்
அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தை முழுமையாக வாங்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஏர்செல் மீதான தொடர் வழக்குகள் மூலம் இந்த நிறுவன கைப்பற்றும் திட்டம் காலத் தாமதம் ஆகிக்கொண்டே வருகிறது.
விரிவாக்கத் திட்டம்
இந்தக் காலதாமத்தின் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சேவை விரிவாக்கப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது.
மேலும் தமிழகத்தில் ஆர்காம் நிறுவனத்திற்கு இருக்கும் வர்த்தக வாய்ப்புகளும் குறைந்து வருவதால் இதன் தலைவர் அனில் அம்பானி சோகத்தில் மூழ்கியுள்ளார்.
மாறன் சகோதரர்கள் விடுதலை
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கில் தொடர்புடைய சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு
இதனைத் தொடர்ந்து ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு ஏற்கப்படலாமா வேண்டாமா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்.
சுப்பிரமணியன் சுவாமி
இவை அனைத்திற்கும் மேலாக ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராகப் பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
ரூ.3,500 கோடி.
ஏர்செல்-மேக்சிஸ் முதலீட்டுக்கு வசதியாக விதிமுறையை மீறி, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் மூலம் 2006ம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதித்தார் எனச் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தார். இந்த முதலீட்டின் மதிப்பு ரூ.3,500 கோடி.
இதுவே முக்கியம்
இதனிடையே டெல்லி உச்ச நீதிமன்றம், மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது பெரிய விஷயமில்லை என்றும், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முக்கியமான வழக்கே தான் தொடுத்த ரூ.3500 கோடி மதிப்புள்ள முதலீட்டுக்கு அன்னிய முதலீடு வாரியம் அனுமதி அளித்தது தான் என்றும் கூறியுள்ளார்.