டெல்லி: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2வது இடம், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் 2வது இடம் (2 மாதங்களுக்கு முன்பு முதல் இடம்) இதுதான் இந்திய டெலிகாம் சந்தையின் மிகப்பெரிய வாய்ப்பு.
கடந்த சில வருடங்களாக உலகில் எந்த நாடுகளிடம் இல்லாத வகையில் இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தவே பெட்ரோல் சுத்திகரிப்பு, உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்து இருக்கும் வர்த்தகத்தில் மட்டுமே அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது டெலிகாம் துறையில் இறங்கியது.
இந்நிலையில் இலவச அறிமுகச் சேவையின் மூலம் அனைவருக்கும் 4ஜி சேவையை வழங்கிய ஜியோ நிறுவனத்திற்குப் புதிதாக ஒரு கறை படிந்துள்ளது.
ஜியோ
இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்களில் ஜியோ நிறுவனம் தான் சிறப்பான அளவில் நெட்வொர்க் சேவையை அளித்து வருகிறது (இண்டர்கனெஷன் பாயின்ட் பரிச்சனைக்குப் பின்). ஆனால் 4ஜி சேவை அளிப்பதாகக் குறி குறைந்த வேகம் கொண்ட இண்டர்நெட் சேவையை மட்டுமே ஜியோ அளிக்கிறது எனக் கிரேடிட் சுசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் கவரேஜ்
கிரேடிட் சுசி என்னும் பன்னாட்டு நிதியியல் நிறுவனம் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யும்போது, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 80 சதவீத நகரங்களில் ஜியோ பிற நிறுவனங்களைக் காட்டிலும் சிறப்பான நெட்வொர்க் கவரேஜ் அளிக்கிறது. 30 சதவீத இடங்களில் சராசரி அளவுகளை விடவும் குறைவான சேவை அளிப்பதாக இந்நிறுவனம் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.
ஏர்டெல்
4ஜி சேவையை மையமாக வைத்துத் துவங்கப்பட்ட ஜியோ குறைவான வேகம் கொண்ட 4ஜி சேவையை மட்டுமே அளிக்கிறது. இந்நிலையில் இந்திய சந்தையில் 4ஜி சேவையைச் சிறப்பாக வழங்கும் நிறுவனமாக ஏர்டெல் பெயரை முன்வைத்துள்ளது கிரேடிட் சுசி.
4ஜி சேவை
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 12Mbps-க்கும் அதிகமான வேகத்தில் 4ஜி சேவை அளிக்கும் நிலையில், ஜியோ, வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சராசரியாக 7-8Mbps அளவிலான வேகத்தில் சேவை அளிப்பதாகக் கிரேடிட் சுசி ஆய்வுகள் கூறுகிறது.