டெல்லி: இந்தியாவில் விற்பனையாகும் மொத்த பயணிகள் வாகனங்களில் இரண்டில் ஒன்று மாருதி சுசூகி நிறுவனத்துடையது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
உண்மைதான் 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் இரண்டில் ஒன்றாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் இது இரண்டாவது முறை என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பெலெனோ, விட்டாரா பிரீசா ஆகிய வாகனங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மேலும் நாட்டில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி வாகனங்களில் 50.4 சதவீத வாகனங்கள் ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை.
2016ஆம் நிதியாண்டில் சராசரியாகக் கார் விற்பனை சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு 45.9 சதவீதமாக இருந்த நிலையில் நவம்பர் 2016இல் இதன் அளவு 52 சதவீதத்தை எட்டி வரலாறு காணாத ஆதிக்கத்தைச் செலுத்தியது.
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் பிராண்டுகளில் மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்தது 8 இடங்களைப் பிடித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் கார் விற்பனையின் அளவு சுமார் 26 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் கார் விற்பனை சந்தையின் சராசரி வளர்ச்சி வெறும் 14.5 சதவீதம் மட்டும் தான்.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5.70 புள்ளிகள் உயர்ந்து 6,155.40 ரூபாயாக உள்ளது.