லார்சன் அண்ட் டியுரோ நிறுவனம் பெங்களுரில் ஐடி பார்க் மற்றும் ஐடி சிறப்புப் பொருளாதாரப் பகுதியை உருவாக்க சுமார் 2,080 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
லார்சன் அண்ட் டியுப்ரோ நிறுவனம் எல் அண்ட் டி எனச் சுருக்கமாகக் கூறப்படும் இந்நிறுவனம் இந்தியாவில் டெக்னாலஜி, இன்ஜினியர்ங், கட்டுமானம், உற்பத்தி மற்றும் நிதி சேவையில் ஈட்டுப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் வருடத்திற்குச் சுமார் 16 பில்லியன் டாலர் அளவிலான வருவாயைப் பெறுகிறது.
விமான நிலையம்
பெங்களுரூ சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் யெலங்கா பகுதியில் ஐடி பார்க் மற்றும் ஐடி சிறப்புப் பொருளாதாரப் பகுதியை உருவாக்க இந்நிறுவனம் கர்நாடகா மாநிலத்திடம் விண்ணப்பம் அளித்தது. இந்த விண்ணப்பத்திற்கான விசாரணை வெள்ளிக்கிழமை வந்த நிலையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
முதலீடும், வேலைவாய்ப்பும்..
எல் அண்ட் டி நிறுவன திட்டத்தின் படி ஐடி பார்க் அமைக்க 800 கோடி ரூபாய் முதலீடும் இதில் 9,100 வேலைவாய்ப்புகள், ஐடி சிறப்புப் பொருளாதாரப் பகுதியை உருவாக்க 1,280 கோடி ரூபாய் முதலீடு இதன் மூலம் 9,800 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனக் கர்நாடக மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
'மேக் இன் இந்தியா-கர்நாடாக'
மேலும் ஆர்.வி.தேஷ்பாண்டே கூறுகையில் இம்மாநில அரசு 'மேக் இன் இந்தியா-கர்நாடாக'க் குறித்து ஒரு முக்கியக் கூட்டத்தைப் பிப்ரவரி 13-14ஆம் தேதிகளில் நடத்த உள்ளது. இதில் சர்வதேச சந்தையைச் சேர்ந்த சுமார் 55 நிறுவனங்கள் கலந்துக்கொள்வதாகக் கூறினார்.
9 துறைகள்
'மேக் இன் இந்தியா-கர்நாடாக'த் தலைப்பில் நடக்கும் கூட்டம் 2 நாள் நடக்க உள்ளது. மேலும் இதில் 9 துறைகளை மையப்படுத்தி 10 தனித்தனி கூட்டங்கள் நடக்க இருப்பதாகவும் தேஷ்பாண்டே கூறினார்.