கடந்த 5 மாதங்களாக இந்திய மக்கள் மத்தியில் பேடிஎம்-யின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பொதுவாக மொபைல் வேலெட், இண்டர்நெட் பாங்கி, ஆன்லைன் பரிமாற்றங்கள் அனைத்தும் பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் மத்தியிலேயே அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும்.
ஆனால் மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பயன்பாட்டின் மீதான தடைக்குப் பின் இந்நிறுவனத்தின் வர்த்தகம் நம்ப முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், பேடிஎம் நிறுவனத்தின் பணப் பரிமாற்ற சேவைகள் இந்திய நகரங்களையும் தாண்டி தற்போது டவுன் மற்றும் கிராமங்களிலும் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கிய சீன நிறுவனம் செயல்படுகிறது.
பேடிஎம்
இந்திய சந்தையின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமான விளங்கும் பேடிஎம் கடந்த 5 மாதத்தில் அடைந்த வளர்ச்சியைக் கண்டு வியக்காத நிறுவனங்களே இல்லை. இதில் பேடிஎம் நிறுவன முதலீட்டாளர்கள் என்ன விதிவிலக்கா..?
அலிபாபா
பேடிஎம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், அதனை முழுமையாகக் கைப்பற்றவும் இதன் முக்கிய முதலீட்டாளர்களான அலிபாபா மற்றும் SAID பார்ட்னர்ஸ் ஆகியவை புதிதாத இந்நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
40இல் இருந்து 60 வரை உயர்வு
ஏற்கனவே சீன நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் அதன் பேமெண்ட்ஸ் மற்றும் வேலெட் சேவை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் இணைந்து சுமார் 40 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது புதிதாக முதலீடு செய்யப்படும் தொகையின் மூலம் பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபாவின் பங்கு இருப்பு 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர உள்ளது.
177 மில்லியன் டாலர்
தற்போது பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் 200 மில்லியன் டாலர் தொகையில், 177 மில்லியன் டாலர் அலிபாபா.காம் சிங்கப்பூர் ஈகாமர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக வர உள்ளது.
மீதமுள்ள தொகை SAIF பார்ட்னர்ஸ் வாயிலாகப் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட உள்ளது.
பங்கு பரிவர்த்தனை
இந்த முதலீட்டுக்கான பங்கு பரிவர்த்தனை அடுத்த 6-12 மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீலில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் சேகர் ஷர்மா தலையிடவில்லை எனத் தெரிகிறது.
ஸ்னாப்டீல்
அலிபாபா நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்த நிலையில், இப்புதிய முதலீட்டின் மூலம் பேடிஎம் நிறுவனத்துடன் ஸ்னாப்டீல் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிக்கல்..
கடந்த 15 மாதங்களாக இந்நிறுவனம் முதலீட்டை ஈர்க்கவும், நிறுவனத்தைச் சீரான முறையில் இயக்கவும் மிகப்பெரிய அளவிலான சிக்கல்களைச் சந்தித்தது. இதனால் நிதி தேவைக்காகவும், செலவுகளைக் குறைக்கவும் ஊழியர்கள் அதிகளவில் வெளியேற்றியது ஸ்னாப்டீல்.
இந்த நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் பேடிஎம் இணைக்கப்பட்டால் கண்டிப்பாக இரு நிறுவனங்கள் மத்தியிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தற்போது இது சாத்தியமாகாது.