பிபிஎப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பலரும் விரும்பக்கூடிய சிறப்பான ஒரு முதலீட்டுத் திட்டமாகும்.
மார்ச் 31-ம் தேதிக்குள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் நம்மில் பலர் வரி சேமிக்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். எனவே பிபிஎப் கணக்கை திறக்கும் முன்பு அதில் உள்ள அம்சங்களை எல்லாம் இங்குத் தெரிந்துகொள்வோம்.
வட்டி விகிதம்
பிபிஎப் முதலீடுகள் பங்குச் சந்தை, ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்று லாபம் அளிக்கவில்லை என்றாலும் இது ஒரு ரிஸ்க் இல்லா முதலீடு ஆகும். இப்போது மார்ச் 31-ம் தேதி வரை பிபிஎப் கணக்குகளில் 8 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படுகின்றது.
மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதத்தை அரசு பத்திரங்கள் மூலம் வரும் வருவாயை கொண்டு மாற்றி அமைக்கின்றது.
முதலீடு வரம்பு
பிபிஎப் கணக்குகளில் அதிகபட்சம் ஒரு நிதி ஆண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். பிபிஎப் கணக்கை உங்களது பெயரில் அல்லது இணை கணக்காக சுய மற்றும் நீங்கள் பாதுகாவலராக உள்ள மைனர் பெயரிலும் உருவாக்கலாம். அதே நேரம் மைனர் பெயரில் கணக்கைத் தனியாகவும் உருவாக்கலாம். பிபிஎப் கணக்கில் 1.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் போது வருமான வரி விலக்கு அளிக்கப்படாது.
அதே நேரம் ஆண்டிற்கு 500 ரூபாய் குறைந்தபட்ச தொகையாக பிபிஎப் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.
மைனர் பெயரில் பிபிஎப் கணக்கை திறக்கும் போது கவனிக்க வேண்டியவை
மைனர் பிபிஎப் கணக்கை தந்தை அல்லது தாய் இருவரில் யாரேனும் ஒருவர் மட்டுமே தங்களது குழந்தைகள் பெயரில் திறக்க முடியும். தந்தை மற்றும் தாய் இருவராலும் ஒரே மைனருக்கு இரண்டு கணக்குகள் தனித்தனியாகத் திறக்க முடியாது.
அதே நேரம் தாத்தா பாட்டியால் தங்கலது பேரக் குழந்தைகள் பெயரில் பிபிஎப் கணக்கை திறக்க இயலாது. இதுவே பெற்றோர்கள் இறந்து தாத்தா பாட்டி தான் சட்ட ரீதியான பாதுகாப்பாளராக இருந்தால் பிபிஎப் கணக்கை திறக்க முடியும்.
எத்தனைக் கணக்குகள் திறக்க முடியும்
தனிநபர் ஒருவரால் ஒரே ஒரு பிபிஎப் கணக்கை மட்டுமே வங்கி அல்லது தபால் அலுவலகங்கள் மூலமாகத் திறக்க முடியும். ஒருவேலைத் தவறுதலாக இரண்டு கணக்குகள் திறந்து இருந்தால் அதில் வரும் வட்டி ஒன்றிணைக்கப்படும்.
முதிர்வு காலத்திற்கு முன்பே பிபிஎப் கணக்கை மூட முடியுமா?
பிபிஎப் கணக்கை முதிர்வு காலத்திற்கு முன்பே மூட முடியும் ஆனால் கணக்கில் ஐந்து நிதி ஆண்டுகள் முழுவதுமாக முதலீடு செய்திருக்க வேண்டும். இப்படி முன்பே பிபிஎப் கணக்கை மூடும் போது உயர் கல்வி, மருத்துவ கட்டணம் போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் முறையான ஆவணங்களை சமர்ப்பித்துப் பெற முடியும்.
நியமனம்
பிபிஎப் கணக்கை திறக்கும் போது நாமினேஷன் எனப்படும் நியமனம் குறித்த விவரங்கள் இருக்காது. அதற்காகப் படிவம்-ஈ ஐ தனியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் சிக்கல்கள்
வங்கிகளுள் கடன் பெற்று அதனை முறையாகத் திருப்பி செலுத்தாமல் இருந்தால் நீதி மன்றமே சென்றாலும் பிபிஎப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது. அதே போன்று வருமான வரி செலுத்தாமல் இருந்தாலும் வருமான வரி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டி வரும்.