பெங்களுரூ: இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாது கூகிள், மைக்ரோசாப்ட், ஆரக்கிள் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் இருக்கும் தங்களது அலுவலகங்களில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த விரைவு எச்1பி விசா சேவையை அதிகளவில் பயன்படுத்தி வந்தது.
விரைவு சேவை என்றால் ஏதோ ஒன்றல்ல.. நம்ம நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் தக்கல் சேவையைப் போன்றே தான் இதுவும்.
இந்த எச்-1பி விசாவுக்கான விரைவு சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு முடிவு செய்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருக்கும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வர்த்தகத்தைக் காப்பாற்ற இந்திய ஐடி நிறுவனங்கள் என்ன செய்யப்போகிறது.?
விரைவு சேவை
தக்கல் சேவையைப் போலவே அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு எச்-1பி விசாவை பெறுவதற்காக நிறுவனங்களுக்கு விரைவு சேவையை அளிக்கிறது.
இதன் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு அனைத்து அடிப்படைத் தகுதிகளும் உள்ளது என்றால் 15 நாட்களுக்குள் எச்-1பி விசா வழங்கப்படும். இதற்குக் கட்டணம் 1,225 டாலர்.
சாதாரண விண்ணப்பங்களை ஆய்வு செய்ய 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை தேவைப்படும்.
தற்காலிக நிறுத்தம்..
இத்தகைய திட்டத்தைத் தான் USCIS அமைப்பு நிறுத்தியுள்ளது. மேலும் இந்தத் தற்காலிக முடக்கம் அடுத்த 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு வட்டாரங்கள் கூறுகிறது.
ஏப்ரல் 3ஆம் தேதி முதல் விரைவு சேவையின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என இந்த அமைப்பு கூறியுள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் இருக்கும் அனைத்து USCIS அமைப்பு அலுவலகங்களிலும் தான்.
எதற்காக இந்தத் தற்காலிக நிறுத்தம்..?
மலையாய் குவிந்துக்கிடக்கும் விண்ணப்பங்கள்
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு இந்தத் தற்காலிக நிறுத்தத்தின் மூலம் உலக நாடுகள் முழுவதும் விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தை ஆய்வு செய்ய உள்ளது.
மேலும் பல மாதங்களாகக் காத்துக்கிடக்கும் எச்-1பி விசா விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் இந்த 6 மாத காலத்தில் ஆய்வு செய்யப்படும் என USCIS அமைப்பு தெரிவித்துள்ளது.
தடை..
மேலும் கடந்த சில வருடங்களாக விரைவு சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனைத் தடுக்கவும், இதன் மூலம் ஆதாயம் தேடும் நிறுவனங்கள் இத்தகைய முறையைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பாக இருக்கும் என USCIS அமைப்பின் பெயர் வெளியிடப்படாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிப்பு
இந்தத் தற்காலிக தடை மூலம் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆன்சைட் ஊழியர்கள் பணி அமர்த்துதலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்திய கல்லூரிகளில் இருந்து பெரிய நிறுவனங்கள் நேரடியாகப் பணியில் அமர்த்தப்படும் மாணவர்களின் விசாவும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
பெரிய நிறுவனங்கள்
பொதுவாகக் கூகிள், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், பேஸ்புக், டிவிட்டர் என முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் இந்திய கல்லூரிகளில் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக விசா பணிகளை ஏப்ரல் மாத துவக்கத்தில் தான் செய்யும்.
USCIS அமைப்பின் தற்காலிக தடையால் இவர்களின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சரி இந்திய ஐடி நிறுவனங்கள் என்ன செய்யப்போகிறது..?
புதிய வழிகள் தேவை...
அமெரிக்கா எச்-1பி விசாவில் விதிக்கப்பட்டு வரும் தொடர் கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்கச் சந்தையில் பணியில் இருக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் இந்தியாவிற்குத் திரும்பு நிலை ஏற்பட்டுள்ளதால், இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய சிக்கலில் தவித்து வருகிறது.
இதனால் தனது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவை அளிக்க முடியாத நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்படும்.
இந்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது அமெரிக்க வர்த்தகத்தைப் பாதுகாக்க புதிய வழிமுறைகளை விரைவாகக் கொண்டு வர வேண்டும் எனப் பிஃல் பெர்ஷ்ட், ஹார்சஸ் பார் சோர்சஸ் என்னும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
65,000 விசாக்கள்
தற்போதைய நிலையில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு பொது வழி திட்டத்தில் வருடத்திற்கு 65,000 விசாக்களை வழங்குகிறது. அமெரிக்கக் கல்லூரிகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் 20,000 விசாக்களை வழங்கி வருகிறது.
இவை அனைத்தும் கம்பியூட்டர் லாட்டரி முறையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாஸ்காம் ஒப்புதல்..
இந்தத் தற்காலிக தடையால் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படும் என இந்தியா ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் வரும் பாதிப்புகளை ஐடி நிறுவனங்கள் முறையாகக் கையாண்டு விரைவாக அதனை முழுமையாகத் தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து இந்திய எம்பசி-யிடம் கடந்த 2 மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவம் நாஸ்காம் கூறியுள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இந்நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் இருக்கும் தனது வர்த்தக அலுவலங்களில் அமெரிக்கக் கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தப் பிரச்சனைகள் அதிகளவில் குறைக்க முடியும் என இந்திய ஐடி நிறுவனங்கள் நம்புகிறது.
இந்திய மாணவர்கள்
அதுமட்டும் அல்லாமல் அமெரிக்கக் கல்லூரிகள் பயிலும் இந்திய மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கச் சந்தையில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் தலைவர்கள் கூறியுள்ளனர்.