இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது ரியல் எஸ்டேட் சொத்துக்களைக் கவனிப்பதற்காக எஸ்பிஐ இன்பரா மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் எஸ்பிஐ வங்கி தனது வர்த்தகத்தை மேம்படுத்த நிலையான வங்கி சேவைகள் அல்லாத பிறவற்றையும் கவனிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இதன் மூலம் வங்கிகளின் வராக்கடனையும் அதிகளவில் குறைக்க முடியும் எனவும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் நம்புகிறது.
மேலும் இந்த வங்கியின் வராக் கடன் பட்டியலில் இருக்கும் சொத்துக்களையும் இப்புதிய நிறுவனத்தின் வாயிலாக விற்பனை செய்ய உள்ளது.
இப்புதிய நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் பிற சொத்துக்களைக் கவனிக்கத் தனிப்பட்ட முறையில் 400 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதுவரை இப்பிரிவைச் சார்ந்த பணிகளைச் செய்து வந்தவர்கள் வங்கியின் பிற சேவைகளிலும் பணியாற்றி வந்தவர்கள். ஆனால் இப்புதிய நிறுவனத்தில் நியமிக்கப்படும் 400 பேர் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
மேலும் இப்புதிய நிறுவனத்தின் பெயரில் இந்தியா முழுவதும் 100 கிளைகள் துவங்கப்பட்டு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கப்படுவார்கள் என் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.