எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள் பணத்தை வங்கி கணக்கில் இருப்பு வைக்க, எடுக்க என அனைத்திற்கும் சில வரம்புக்கு அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் பிடிக்கும் நிலையில் இந்திய தபால் துறையின் சேமிப்புக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் வரம்பின்றிப் பணம் எடுக்கலாம் என்று கூறினால் நம்ப முடிகின்றதா?
தபால் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு கணக்குத் திட்டங்களில் கணக்கைத் துவங்கி வங்கி கணக்கு போன்றே இணையதள வங்கி வசதி, ஏடிஎம் வசதி, செக் புக் வசதி, மொபைல் செயலி வங்கி சேவை போன்றவற்றைப் பயன்படுத்து மகிழலாம். குறைந்தபட்ச இருப்பு தொகையும் மிகக் குறைவு.
எனவே தபால் துறை அளிக்கும் சேமிப்புக் கணக்குகளில் உள்ள நன்மைகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை
தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் போது பணமாக மட்டுமே டெபாசிட் செய்து கணக்கை துவங்க முடியும்.
செக் இல்லாத சேமிப்புக் கணக்குகளுக்கு ரூபாய் 50 குறைந்தபட்ச இருப்புத் தொகையாகச் செலுத்தினால் போதும். இதுவே செக் புக் வேண்டும் என்றால் குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள சாதரான சேமிப்பு கணக்கிலும் 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்து செக் புக் பெறும் சேமிப்பு கணக்காக மாற்றிக்கொள்ளவும் முடியும்.
வரி விலக்கு
தபால் நிலையம் சேமிப்புக் கணக்குகளில் பணத்தைச் சேமித்து வரும்போது ஆண்டுக்கு 4 சதவீதம் இருப்புத் தொகைக்கு வட்டி அளிக்கப்படும். அப்படிப் பெறும் வட்டி தொகைக்கு 10,000 ரூபாய் வரை வரி விலக்கு உண்டு.
சேமிப்பு கணக்கு கிளை மாற்றுதல்
நாம் எந்த ஒரு தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் அதனைப் பிற கிளைகளுக்கு எளிதாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.
எத்தனை சேமிப்புக் கணக்குகள் திறக்க முடியும்?
ஒரு தபால் நிலையத்தில் தனிநபர் ஒருவரால் ஒரே ஒரு சேமிப்புக் கணக்கை மட்டுமே திறக்க முடியும். இரண்டு மூன்று கணக்குகள் வேண்டும் என்றால் பிற கிளைகளில் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்.
குறைந்தபட்ச வயது
தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கைக் குறைந்து 10 வயது முதலே திறக்க முடியும். அது மட்டும் இல்லாமல் மைனர் குழந்தைகளே தங்களது சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கவும் செய்யலாம்.
இணை கணக்குகள்
தவால் அலுவலகச் சேமிப்பு கணக்குகளைப் பொருத்தவரை மூன்று பேர் வரை இணை சேமிப்புக் கணக்குகளில் இணையலாம்.
இணையதள வங்கி சேவை
தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குகளுக்கு இணையதள வங்கி சேவையும் அளிக்கப்படுகின்றது. வங்கி கணக்குகளில் எப்படி இணையதள வங்கி சேவையைப் பயன்படுத்துகின்றோமோ அப்படியே தபால் நிலைய சேமிப்பு கணக்கிலும் இணையதளச் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்திப் பணத்தைப் பிற வங்கி கணக்குகளுக்கும், தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குகளுக்கு அனுப்பலாம், பெறலாம்.
ஏடிஎம்
தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குகளுக்கு ஏடிஎம் கார்டு அளிக்கப்படுகின்றது. இந்த ஏடிஎம் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம். பரிவர்த்தனை கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் தினசரி வரம்பு அளவு உண்டு. இப்போது சேமிப்பு கணக்கு துவங்குபவர்களுக்கு உடனடி ஏடிஎம் கார்டு வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
வட்டி விகிதம்
தபால் நிலையம் சேமிப்பு கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
கணக்கைத் திறக்க கட்டணம் உண்டா
தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கைத் திறக்க குறைந்தது 20 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
முக்கியக் குறிப்பு
தபால் அலுவலகத்தில் கணக்கை திறந்தால் மூன்று நிதி ஆண்டுகளில் ஒரு முறையாவது பணத்தை இருப்பு வைப்பது மற்றும் சேமிப்புக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது பொன்ற சேவையைப் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் கணக்கு தானாகவே மூடப்படும்.