ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஐந்து துணை வங்கிகளுடன் ஏப்ரல் 1 முதல் இணைகின்றது, அதன் பிறகு கிட்டத்தடட்ட 47 சதவீத துணை வங்கிகளின் கிளைகளை மூட இருப்பதாகவும், ஏப்ரல் 24 முதல் இதற்கான பணிகள் துவங்கப்படும் என்றும் எஸ்பிஐ நிர்வாகம் கூறியுள்ளது.
துணை வங்கிகளின் தலைமை அலுவலகங்களில் இரண்டு மட்டுமே இயங்கும். மீதம் உள்ள மூன்று அலுவலகங்கள், 27 மண்டல அலுவலகங்கள், 81 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 11 நெட்வொர்க் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் தினேஷ் குமார் காரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஏப்ரல் 24 வரை இந்த அலுவலகங்கள் அப்படியே இயங்கும் என்றும் அதன் பிறகு துணை வங்கிகளைக் கட்டுப்படுத்தும் அலுவலகங்கள், தலைமை அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிற நெட்வொர்க் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இணையும் துணை வங்கிகள்
இதனால் எஸ்பிஐ வங்கியுடன் ஸ்டேட் பாங்க் ஆ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் , ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆ பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவை இணைகின்றன. இவை மட்டும் இல்லாமல் பாரத் மஹிலா வங்கியும் எஸ்பிஐ வங்கியுடன் இணைவது உறுதியாகின்றது.
சொத்து மதிப்பு
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 30.72 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகளவில் 64 வது இடத்தில் இப்போது உள்ளது. இப்போது துணை வங்கிகளுடன் இணைவதை அடுத்து எஸ்பிஐ வங்கியின் சொத்து மதிப்பு 40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் உலகளவில் மிகப் பெரிய வங்கியாக டாப் 50 வங்கிகள் பட்டியலில் இணைந்து 45வது இடத்தை எஸ்பிஐ பிடிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
எதற்காக இந்த முடிவு?
எஸ்பிஐ துணை வங்கிகளின் கிளையை மூடுவது இணைவிற்குப் பிறகு ஒரு இடத்தில் இரண்டு மூன்று துணை வங்கிகள் இருப்பதைத் தவிர்ப்பதற்காகவே என்று காரா கூறுகிறார்.
ஐந்து துணை வங்கிகள் இணைவின் சட்ட சிக்கல்கள் ஏப்ரல் 1 முதல் முடிவுக்கு வந்தாலும் அனைத்து பணிகளும் முடியவில்லை என்றும் அதற்கான பணிகள் ஏப்ரல் 24 முதல் தான் துவங்கும் என்றும் இதில் ஐந்து துணை வங்கிகளின் இருப்பு நிலைக் குறித்த கணக்கு விவரங்கள் எல்லாம் கணக்கில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இருப்பு நிலைக் கணக்கு
மார்ச் 1-ம் தேதி அன்றே துணை வங்கி இருப்பு நிலைக் கணக்கு விவரங்கள் பெறப்படும் ஆனால் அதனை முறையாகச் சரிபார்த்துக் கணக்கில் கொண்டு வர 15 முதல் 20 நாட்கள் வரை பிடிக்கும் என்றும் காரா கூறியுள்ளார்.
மூடப்படும் அலுவலகங்கள்
இப்போது எஸ்பிஐ வங்கியில் 550 அலுவலகங்களும், துணை வங்கிகளில் 259 அலுவலகங்களும் உள்ளன. இணைவிற்குப் பிறகு 687 அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்றும் 122 அலுவலகங்கள் மூடப்படும் என்றும் கூறப்படுகின்றது.
பின்னர் இந்த இணைவினால் 1,107 ஊழியர்கள் வாடிக்கையாளர் இடைமுகம் நடவடிக்கைகளுக்காகப் பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறுகின்றனர். இதனால் மேலும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு அவர்களுக்குச் சேவை வழங்குவதில் உள்ளதில் உள்ள சிக்கல் எல்லாம் தீரும் என்றும் கூறப்படுகின்றது.
முன்பு எஸ்பிஐ வங்கியுடன் இணைந்த வங்கிகள்
இதே பொன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் 2010-ம் ஆண்டும், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா 2008-ம் ஆண்டும் இப்படித் தான் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.