2017 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு பிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை 0.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பினால் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமான பிபிஎப் திட்டத்தில் 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் இந்த அளவிற்குக் குறைந்துள்ளது என்று தேசிய சேமிப்பு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.
தேசிய சேமிப்புப் பத்திரங்கள்
5 வருட தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி விகிதமும் 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி விகிதம் சென்ற காலாண்டு வரை 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி திட்டம் எனப்படும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான செல்வ மகள் திட்டத்தில் 8.5 சதவீதமாக இருந்து வந்த வட்டி விகிதம் 8.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சென்ற ஆண்டு முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது 2016-2017 ஆண்டிற்கான 4 வது காலாண்டு முடிந்துள்ள நிலையில் 2017-2018 நிதி ஆண்டிற்கான காலாண்டில் இந்த மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
கிசான் விகாஸ் பத்திரம்
கிசான் விகாஸ் பத்திர திட்டத்தின் வட்டி விகிதத்தையும் மத்திய அரசு இதே போன்று 7.7 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதம் வரை குறைத்துள்ளது.
பிற திட்டங்கள்
இதே போன்று மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், ஐந்து வருட தேசிய சேமிப்புப் பத்திரம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் முறையே 8.4 சதவீதம் மற்றும் 7.9 சதவீதமாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி ஆணையம்
ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிக்கும் வருங்கால வைப்பு நிதி ஆணையமாம் இதற்கு முன்பு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்து வந்தது. இப்போது அது மாற்றப்பட்டுள்ளது.
சியாமளா கோபிநாத் தலைமையிலான குழு தான் இம்முறை சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.