மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மஹிளா வங்கியுடன் இணைக்கப்பட்டதன் மூலம் உலக வங்கிகள் பட்டியலில் 50 இடத்திற்குள் நுழைந்துள்ளது.
50 கோடி வாடிக்கையாளர்கள்
துணை வங்கிகள் உடனான இணைப்பிற்குப் பின் புதிய நிதியாண்டில் எஸ்பிஐ வங்கி 50 கோடி வாடிக்கையாளர்கள் உடன், 44.77 லட்சம் கோடி ரூபாய் உடன் தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
வட்டி விகிதம்
2017-18 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை எஸ்பிஐ வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தின் அடிப்படை விகிதத்தை 15 புள்ளிகள் குறைத்து 9.10 சதவீதமாக அறிவித்துள்ளது.
ஈஎம்ஐ
இதன் மூலம் தற்போது வங்கியில் கடன் பெற்றுள்ள அனைவரின் ஈஎம்ஐ குறையும். மேலும் இந்த வட்டி குறைப்பு, சில்லறை கடன் பிரிவு வாடிக்கையாளர்களை முன்வைத்துத் திட்டமிடப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு
5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மஹிளா வங்கியுடனான இணைப்பு ஏப்ரல் 1ஆம் தேதி நிகழ்ந்தது. இதன் மூலம் இவ்வங்கியில் சேமிப்பு கணக்காளர்களின் எண்ணிக்கை 43.55 கோடியாக உயர்ந்துள்ளது.
ஊழியர்கள்
அதுமட்டும் அல்லாமல் இவ்வங்கியின் இணைப்பின் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை 2,70,011 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2,800 ஊழியர்கள் விஆர்எஸ் பெற்றுள்ளனர். மேலும் இவ்வங்கியில் பணியாற்றும் 12,000 அதிகாரிகள் விஆர்எஸ் பெற தகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.