மும்பை: ரிசர்வ் வங்கி மார்ச் மாதம் நடத்திய கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும், இதன் படி விரைவில் 200 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் எனச் செய்திகள் கிடைத்துள்ளது.
மத்திய அரசிடம் இதற்கான ஒப்புதல்கள் கிடைத்த உடன் 200 ரூபாய் நோட்டுகளின் அச்சு பணிகளை 2017ஆம் ஆண்டின் ஜூன் மாத்தில் துவங்கும் என ரிசர்வ் வங்கியின் 2 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2000 ரூபாய் நோட்டு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலாக்கத்தின் போது 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும், சந்தையில் அதனை யாரும் விரும்பவில்லை, காரணம் சில்லறை தட்டுப்பாடு.
குறைந்த மதிப்புடைய நோட்டுகள்
அதேபோல் அதிகளவிலான கருப்புப் பணத்தைப் பதுக்குதலை தடுக்க 1000 ரூபாய் போல் இல்லாமல் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது.
மார்ச் 31
பணமதிப்பிழப்புக் காலங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் மார்ச் 31 தேதி முடிவிற்கு வந்தது. இதன் மூலம் எவ்விதமான தடையுமின்றி ஏடிஎம், வங்கிகளில் இனி பணப் பரிவர்த்தனையைச் செய்யலாம்.
ஆர்பிஐ
ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 14 பேர் உள்ளனர். ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல், 4 துணை கவர்னர்கள், பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், நிதி சேவை செயலாளர் அன்ஜுலி ஆகியோர் நிர்வாகம் குழுவில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.
நவம்பர் 8
பிரதமர் மோடி 2016, நவம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 17.9 டிரில்லியன் ரூபாய் பணத்தில் 86 சதவீதமாக இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இனி செல்லாது என் அறிவித்தார்.
இயல்பான நிலை
ரிசர்வ் வங்கியின் தகவல்கள் படி 2017 மார்ச் 24ஆம் தேதி வரையில் இந்தியாவில் 13.12 டிரில்லியன் ரூபாய் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில், இயல்பான நிலைக்குத் திரும்பும் வகையில் இப்புதிய 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளது.