மும்பை: உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கும், அதனைச் சார்ந்துள்ள வர்த்தகத்திற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது இந்தியா தான்.
இந்த வகையில் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை புரட்சியில் துவக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கண்ட லெனோவோ- மோட்டோரோலா கூட்டணி கடந்த வருடம் எவ்விதமான அதிரடி சலுகைகள், ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அமைதியாக இந்தியாவில் 1 கோடி போன்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
புதிய தொழிற்சாலை
இந்நிலையில் இக்கூட்டணி இந்தியாவை மையமாக வைத்து ஆசிய சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தை அடையத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் படியாக இந்தியாவில் லெனோவோ- மோட்டோரோலா கூட்டணி சொந்தமாக ஸ்மார்ட்போன் தொழிற்சாலை துவங்க முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி
மேலும் இக்கூட்டணி நிறுவனம், ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படும் ஜிஎஸ்டி-ஐ உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் பின் இதன் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தையும் லாபத்தையும் ஈர்க்க முடியும் என்பதே இதற்குக் காரணம்.
புதிய முதலீடு
இந்தியாவில் எங்களது வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் புதிய முதலீடுகளுடன் புதிய பணிகளைச் செய்யத் திட்டமிட்டு வருகிறோம் என லெனோவோ மொபைல் வர்த்தகப் பிரிவின் தலைவர் டில்லன் யீ கூறினார்.
தற்போது டில்லன் மோட்டோரோலா நிறுவனத்தின் வர்த்தகத்தையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லன் யீ
இந்தியாவில் ஓப்போ, ஜியோனி நிறுவனங்களைப் போலவே லெனோவோ- மோட்டோரோலா கூட்டணி உற்பத்தி தளத்தை அமைக்குமா என்று கேட்டபோது, அதற்கான சரியான வாய்ப்புகளைத் தேடி வருகிறோம் என டில்லன் யீ கூறினார்.
வாய்ப்புகள் அதிகம்
தற்போது நாங்கள் ஜிஎஸ்டி சட்ட விதிகளை முழுமையாகப் படித்து வருகிறோம். வர்த்தக வாய்ப்புகள் நிர்வாகத்திற்கு ஏதுவாக அமைந்தால் கண்டிப்பாக அதற்கான பணிகளைச் சிறப்பாகச் செய்வோம் எனவும் அவர் கூறினார்.
சென்னை பிளெக்ஸ்டிரானிக்ஸ்
மேலும் லெனோவோ- மோட்டோரோலா கூட்டணி தனது முக்கிய விற்பனை பொருளான மோட்டோ ஈ மற்றும் ஜி, லெனோவோ-வின் கே சீரியஸ் மாடல் போன்களைப் பிளெக்ஸ்டிரானிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த முறையில் செய்து வருகிறது. இவை அனைத்தும் சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தரத்தில் குறைபாடு
பிளெக்ஸ்டிரானிக்ஸ் வருடத்திற்கு 6 கோடி மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது, ஆனால் லெனோவோ- மோட்டோரோலா கூட்டணி தரத்தின் தேவையில் சற்று குறைபாடு உள்ளது.
மேக் இன் இந்தியா
இந்தியாவில் தொடர் வளர்ச்சியை நிர்வாகம் எதிர்பார்க்கும் வேளையில் உள்ளாட்டுத் தயாரிப்புத் தற்போது மிகவும் அவசியமாக உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிப்பில் ஈடுபட்டால் 12.5 சதவீதம் அளவிலான லாபம் மட்டுமே கிடைக்கிறது. இறக்குமதி செய்தாலும் இதே அளவில் தான் செலவினங்கள் குறைகிறது.
இதன் அடிப்படியினாலே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள்
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் வர்த்தகத்தை உயர்ந்த பல முயற்சி செய்து தோற்றுப்போன நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், வர்த்தகத்தை இரட்டிப்பாக்கவும் முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் முதல் பகுதியாகப் பெங்களுரில் புதிய தொழிற்சாலையை அமைக்க இந்த அமெரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தேடுதல் வேட்டை
2016ஆம் நிதியாண்டில் டிசம்பர் மாதத்திலேயே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடியாகத் தொழிற்சாலையைத் துவங்க முடிவு செய்த நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கும் வர்த்தகத்திற்கும் சரியான இடத்தைத் தேடி வந்தது.
கர்நாடக அரசு
இந்தத் தேடுதல் முடிவில் ஆப்பிள் நிறுவனம் பெங்களுரில் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்குக் கர்நாடக அரசு வரவேற்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு இழப்பு
ஏற்கனவே தமிழ்நாட்டில் நோக்கியா, பாக்ஸ்கான், பிளெக்ஸ்டிரானிக்ஸ் போன்ற உலகின் பல முன்னணி மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது தொழிற்சாலையைப் பெங்களுரில் அமைப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு தான்.
தமிழ்நாடா..? கர்நாடகாவா..?
உற்பத்தி சந்தைக்குப் பெயர்போன தமிழ்நாட்டை விட்டுவிட்டு மென்பொருள் சந்தையான ஆப்பிள் நிறுவனம் கர்நாடகா சென்ற நிலையில் லெனோவோ- மோட்டோரோலா கூட்டணியாவது தமிழ்நாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நோக்கியா
முன்பு நோக்கிய நிறுவனம் சென்னை தொழிற்சாலையின் மூலம் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும், உற்பத்தியையும் செய்த நிலையில், வரிப் பிரச்சனைகள் காரணமாகவும், நிறுவனம் சந்தையில் தோற்றுப்போன காரணத்தினாலும் நோக்கியா சென்னை தொழிற்சாலையை மூடியது.
10,000 வேலைவாய்ப்புகள்
இதனால் பல ஆயிரக் கணக்கானோர் வேலைவாய்ப்பு இழப்பைச் சந்தித்தனர். தற்போது லெனோவோ- மோட்டோரோலா கூட்டணி தமிழகத்திற்கு வந்தால் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.