மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான 2 நாள் நாணய கொள்கை கூட்டம் புதன்கிழமை துவங்கிய நிலையில் இன்று முடிவடைய உள்ளது. 2017-18 நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம் இது என்பதால் வர்த்தகச் சந்தையில் இக்கூட்டம் முக்கியக் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த முறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றும் ஏதும் அறிவிக்காது எனச் சந்தை கணிப்புகள் வெளிவந்துள்ளது.
வாய்ப்புகள் மிகவும் குறைவு
பணவீக்கத்தைத் தாண்டி அமெரிக்கச் சந்தையும் வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தை இந்த முறை உயர்த்தாது என்றும் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் கண்டிப்பாக மாற்றும் இருக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இன்று நாணய கொள்கை கூட்டம் முடியும் நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?
பணவீக்கம்
இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 39 மாத உயர்வான 6.55 சதவீதத்தைப் பிப்ரவரி மாத்தில் எட்டியது. அதேபோல் சில்லறை பணவீக்கமும் 3.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆர்பிஐ கூட்டத்தின் முடிவில் கவர்னர் பணவீக்கம் குறித்து முக்கியத் தகவல்களை அளிப்பார்.
பல காரணிகள்
பணவீக்கம் நாம் சாப்பிடும் உணவில் இருந்து உடுத்தும் உடை வரை அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் ஜிஎஸ்டி, 7வது சம்பள கமிஷன், பணமதிப்பிழப்பின் பாதிப்புகள் தீர்க்கும் முயற்சிகள், அறுவடை காலம், உணவுப் பொருட்களின் விலை, அமெரிக்கப் பெடரல் வங்கி ஆகிய அனைத்தும் கருத்தில் கொள்ளவேண்டிய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி உள்ளது.
வராக்கடன்
ஏற்கனவே நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக்கடனை முழுமையாகத் தீர்க்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து எடுக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று வராக்கடன் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
பணப்புழக்கம்
இந்தியாவில் கடன் அளவு தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி நாட்டில் எப்படிப் பணப்புழக்கத்தை அதிகரிக்க உள்ளது என்பதை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.