2,000 ரூபாய் நோட்டில் 28,000 கள்ள நோட்டுகள் பிடிபட்டன: முதல் இடத்தைப் பிடித்துக் குஜராத்..!
மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நொட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பிறகு வெளியான புதிய 2,000 ரூபாய் நோட்டில் இது வரை 28,000 கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளது.
இந்தியா வங்க தேசம் எல்லையில் மேற்கு வங்கத்தில் மட்டும் எல்லை பாதுகாப்புப் படை ரூ. 2000 கள்ள நோட்டுகளில் 378-ஐ பிடித்துள்ளது. அசாம் மாநிலத்தில் 7.56 லட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
முதல் இடம் பிடித்த குஜராத்
இதே போன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) 2,000 ரூபாயில் 22,677 கள்ள நோட்டுகளைப் பிடித்துள்ளது. இதில் குஜராத் தான் முதலிடம் என்றும், 22,479 கள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் அங்குத் தான் பிடிபட்டுள்ளது என்றும் மத்திய அரசு புதன் கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குஜராத் காவல் துறை மட்டும் 4,251 கள்ள 2000 ரூபாய் நொட்டுகளைப் பிடித்துள்ளது. நாடு முழுவதும் பிடிக்கப்பட்ட 2,000 ரூபாய் கள்ள நோட்டில் 95 சதவீதம் குஜராத்தில் மட்டும் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
500 ரூபாய் கள்ள நோட்டுகள்
10 மாநிலங்களின் காவல் துறை புதிய 500 ரூபாய் நோட்டுகளிலும் மொத்தமாக 12,956 கள்ள நோட்டுகளைப் பிடித்துள்ளன.
இதிலும் குஜராத் மாநிலம் தான் முதல் இடம். புதிய 500 ரூபாயில் மட்டும் 8,720 கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன. மேற்கு வங்கத்தில் 3,857 நோட்டுகள் சிக்கியுள்ளன.
500 ரூபாய் புதிதா பழையதா என்று தெரியவில்லை
மத்திய அரசு எவ்வளவு கள்ள 500 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று கூறியிருந்தாலும் மாநில அரசுகள் எவ்வளவு புதிய நோட்டுகள் மற்றும் பழைய நோட்டுகள் என்று கூறவில்லை.
இந்தியா முழுவதும் பிடிபட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு
மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சரான கிரென் ரிஜ்ஜூ பாராளுமன்றத்தில் இது பற்றிக் கூறும் போது இந்தியா முழுவதும் செல்லா ரூபாய் நொட்டு அறிவிப்பிற்குப் பிறகு 6.2 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளதாகவும், அந்த ரூபாய் நோட்டுகள் பற்றி விசாரணை மேற்கொண்டு வரப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.
அதிகத் தரம் இல்லை
பாதுகாப்புத் துறை வட்டாரம் பிடிபட்ட கள்ள நோட்டுகள் எல்லாம் ஒன்றும் அதிகத் தரம் வாய்ந்தவை அல்ல என்று கூறின.