உலகளவில் இந்திய டெலிகாம் துறை வேகமாக வளரும் சந்தைகளில் ஒன்று, குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சீனாவிற்குப் பின் 2வது இடத்தில் இருப்பது இந்தியா தான். அமெரிக்கா, பிரிட்டன் எல்லாம் இந்தியாவிற்குப் பின்னால்.
சேவையிலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் இந்திய டெலிகாம் துறை வேகமாக வளர்ந்தாலும், இத்துறை ஊழியர்களின் வேலைவாய்ப்புத் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் எதிரொலியாக டாடா டெலிசர்வீசஸ் அதிரடியாக 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
டாடா டெலிசர்வீசஸ்
டாடா குழுமத்தின் டெலிகாம் வர்த்தகப் பிரிவான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் சுமார் 500-600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாகச் சேல்ஸ் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பிற பிரிவுகளில் கணிசமான அளவில் பணிநீக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாத சம்பளம்
இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை முன்பணமாக அளித்துப் பணிநீக்கம் செய்யப்படுவதாக இந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை டாடா டெலிசர்வீசஸ் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
டெலிகாம்
இந்திய டெலிகாம் துறையில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜியோ அறிமுகத்திற்குப் பின் வர்த்தகத்தைக் காத்துக்கொள்ள நிறுவனங்கள் இணைந்து வருகிறது.
இதனால் டெலிகாம் நிறுவனங்களில் இருக்கும் அதிகப்படியான ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறது.
இந்தியா
டாடா குழுமத்தின் டெலிகாம் வர்த்தகத்திற்காகவும், இத்துறையில் இருக்கும் பிற நிறுவனங்களுக்குச் சேவை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட டாடா டெலிசர்வீசஸ் தற்போது இந்தியாவில் சுமார் 19 வட்டங்களில் இயங்கி வருகிறது.
சேவைகள்
இந்தியாவில் டாடா டெலிசர்வீசஸ் 51.2 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ மற்றும் 3ஜி சேவைகளை அளித்து வருகிறது.
இந்தியாவில் ஒட்டுமொத்த 1.16 பில்லியன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 4.4 சதவீத வாடிக்கையாளர்களை டாடா குழுமம் பெற்றுள்ளது.
ஏர்செல்
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் கேரளாவில் பகுதிகளில் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்களில் முக்கியமான இடத்தையும் வர்த்தகத்தையும் பெற்றுள்ள ஏர்செல் நிறுவனம் சமீபத்தில் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பிங்க் ஸ்லிப் அளித்துள்ளது
8000 ஊழியர்கள்
இந்தியாவில் பல பகுதிகளில் சேவை அளித்தும் வரும் ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இணைப்பு
ஜியோ அறிமுகத்திற்குப் பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி) ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் இரு தரப்பிலும் ஒப்புதல் பெற்றது, அதைத் தொடர்ந்து டெலிகாம் துறையில் டாப் 5 இடங்களில் இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது இணைக்கப்பட உள்ளது.
ஏர்டெல் நிறுவனமும் டெலிநார் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
வேலைவாய்ப்புப் பாதிப்பு
இந்திய டெலிகாம் நிறுவனங்களின் தொடர் இணைப்பால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் மீதான பாதிப்பு அதிகரித்துள்ளது.
4 - 4.5 சதவீதம்
இந்திய டெலிகாம் துறையில் 1.3 லட்சம் கோடி என்ற மொத்த வருமானத்தில் 35000 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான செலவுகள் மூலம் மட்டுமே இழந்து வருகிறது டெலிகாம் நிறுவனங்கள்.
அதிலும் விற்பனை மற்றும் விநியோக பிரிவில் மட்டும் அதிகப்படியான வருவானத்தை ஊழியர்கள் வாயிலாக இழந்து வருகிறது. இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்களில் 22 சதவீத வருவாயும் இப்பிரிவில் இருந்து தான் வருகிறது.
இது தான் காரணம்
இத்தகைய சூழ்நிலையில், 22 சதவீத வருவாய் அளிக்கும் இப்பிரிவில் இருந்து வருவாய் அளவுகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது டெலிகாம் நிறுவனங்கள். இதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது நிறுவன இணைப்புகள்.
பொதுவாக இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டால், அதிகச் சம்பளம் பெறும் ஊழியர்கள், தேவையற்ற ஊழியர்கள், ஆட்டோமேஷன், எனப் பல காரணங்களுக்காக ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இதே சூழ்நிலை தான் தற்போது டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ளது.
25,000 வேலைவாய்ப்புகள்
டெலிகாம் துறையில் நிறுவன இணைப்புகளால் குறைந்தபட்சம் 10,000 முதல் 25,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்தச் சில வருடங்களில் 1 லட்சம் வரையில் கூட உயரலாம்.
மேலும் பல டெலிகாம் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் வேலைவாய்ப்பு குறித்த ஆபத்தை உறுதி செய்துள்ளனர்.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஏர்டெல் - 19,048
ஐடியா - 17,000
வோடபோன் - 13,000
ஏர்செல் - 8,000
ஆர்காம் - 7,500
டாடா டெலிகாம் - 5,500
இவை அனைத்தும் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள்.
ஐடி துறை
டொனால்டு டிரம்ப் அதிபராக அமெரிக்காவில் பதிவியேற்றிய பின் இந்திய சந்தையில் தொடர்ந்து பல பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இந்திய நிறுவனங்களின் அமெரிக்க அலுவலகங்களில் அந்நாட்டுக் குடிமக்களை அதிகளவில் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருக்கும் ஊழியர்களின் பணியின் உத்தரவாதம் அதிகளவில் குறைந்துள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இதன் காரணமாக ஐடித்துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் விப்ரோ 600 ஊழியர்களை வெளியேற்றிய நிலையில், இதே பிரச்சனை தான் தற்போது டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ளது.
அங்கு டொனால்டு டிரம்ப், இங்கு ஜியோ.