சூப்பர்பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டுகாட்டி இந்தியாவின் ராயல் என்பீல்ட் நிறுவனம் வாங்கப் பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.
இதன் மூலம் இனி இந்திய சாலைகளில் டுகாட்டி வாகனங்கள் மின்னல் வேகத்தில் ஓடுவதை அதிகளவில் பார்க்க முடியும்.
இத்தாலி நிறுவனம்
ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வாகன் குரூப் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தாலி நாட்டின் டுகாட்டி நிறுவனம் சூப்பர்பைக் பிரிவில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
வோக்ஸ்வாகன் டீசல் வாகன புகை கட்டுப்பாட்டில் செய்த ஊழல் மூலம் மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனைச் சமாளிக்க டுகாட்டி நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
10,500 கோடி ரூபாய்
இந்நிலையில் டுகாட்டி நிறுவனம் தற்போது 1.5 பில்லியன் யூரோ அதாவது 10,500 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தை இந்திய சாலைகளை மிரட்டும் ராயல் என்பீல்ட் வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ராயல் என்பீல்ட்
எயச்சர் மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், தனது வர்த்தகத்தை ஐரோப்பா, மேற்கு அமெரிக்கா, ஆசிய சந்தைகளுக்குத் தற்போதும் விரிவாக்கம் செய்து கணிசமான வெற்றியை அடைந்துள்ளது.
கைப்பற்றுதல்
இந்த வெற்றியில் மேலும் ஒரு சாதனையை அடைய ராயல் என்பீல்ட் நிறுவனம் விற்பனைக்கு வந்துள்ள டுகாட்டி நிறுவனத்தை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து எயச்சர் மோட்டார்ஸ் நிர்வாகத் தலைவர் சித்தார்த்தா லால், தற்போது எதுவும் கூறமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
டுகாட்டி
டுகாட்டி நிறுவனம் தற்போது முமையாக ஆடி நிறுவனத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்நிறுவனம் தற்போது 800சிசி மற்றும் 1200சிசி இரு சக்கர வாகனங்களைத் தயாரித்து வருகிறது.
விற்பனை
இந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 4,196 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தாலும் இந்நிறுவனத்தில் இருக்கும் டெக்னாலஜி மற்றும் தயாரிப்புத் தளங்கள் அதிக மதிப்புடையவை. இதன் காரணமாகவே தற்போது இந்நிறுவனம் 10,500 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் இந்நிறுவனம் உலகம் முழுவதும் 55,451 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ராயல் என்பீல்டு கடந்த வருடம் 6.66 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி
தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தை வாங்க சரியான போட்டி நிறுவனமாக இருப்பது சுசூகி, போலாரிஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன்.
ஜாகுவார்
இதேபோன்ற பல்வேறு சிக்கலில் வர்த்தகம் இன்றித் தவித்த பிரிட்டன் நாட்டின் ஜாகுவார் கார் தயாரிப்பு நிறுவனத்தை இந்தியாவின் டாடா குழுமம் அதன் விற்பனை உரிமையை மட்டும் கைப்பற்றி இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய விற்பனை புரட்சியைச் செய்துள்ளது.
டுகாட்டி - ராயல் என்பீல்ட்
அதேபோல் டுகாட்டி - ராயல் என்பீல்ட் கைப்பற்றல் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இதன் விற்பனை உச்சத்தை அடையும் என ஆட்டோமொபைல் சந்தையில் கருத்து நிலவுகிறது.