மும்பை: நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவன ஏர்டெல், ஜியோ உடனான போட்டியில் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காகத் தனது சேவையின் கட்டணத்தைக் குறைத்து ஜியோவிற்கு இணையான விலையை அறிவித்தது.
இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தார்களோ இல்லையோ, 4 வருடத்தில் மோசமான காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளனர்.
பார்தி ஏர்டெல்
மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் பார்தி ஏர்செல் நிறுவனத்தின் லாப அளவீடுகள் சுமார் 72 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் முழ்க செய்தது.
கடந்த வருடம் அதே காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 1,319.2 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற நிலையில் மார்ச் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் வெறும் 373.4 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.
கணிப்புகள்
சந்தையில் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த சந்தை ஆய்வாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் காலாண்டின் லாபம் 542 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணித்திருந்தது.
ஆனால் கணிப்புகளை விடவும் மிகவும் குறைவான அளவிலேயே லாபத்தைப் பெற்றுள்ளது ஏர்டெல்.
55 சதவீதம் சரிவு
இந்நிலையில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 55 சதவீதம் வரை சரிந்ததை அடுத்து. தொடர்ந்து 2 காலாண்டுகளாக மிகப்பெரிய அளவில் லாபத்தை இழந்து வருகிறது.
வருவாய் இழப்பு
2017ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் (மார்ச் 31) ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவு 12 சதவீதம் குறைந்து 21,934.6 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
வருவாய் 12 சதவீதம் மட்டுமே சந்துள்ள நிலையில், லாபம் 72 சதவீதம் சரிந்துள்ளது.
வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானம்
ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி மாத வருமானம் 194 ரூபாயில் இருந்து தற்போது 158 ரூபாயாகக் குறைந்துள்ளது.
டேட்டா சேவை மூலம் கிடைக்கும் வருமானமும் 196 ரூபாயில் இருந்து 162 ரூபாயாகக் குறைந்துள்ளது.
நான்கு வருடம்
கடந்த 4 வருடத்தில் இதுவே மிகவும் குறைந்த லாபத்தை அடைந்த காலாண்டு என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏர்டெல் மீது முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யும் அளவிற்குத் தற்போது ஏர்டெல் நிறுவனம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டெலிநார்
மேலும் சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் டெலிநார் நிறுவனத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.