நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் டெக்னாலஜிஸ் வியாழக்கிழமை 2017ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.
சந்தையில் இத்துறை நிறுவனங்கள் மார்ச் காலாண்டில் அதிகளவிலான வர்த்தக மற்றும் லாபத்தில் சரிவை சந்தித்த நிலையில். எச்சிஎல் நிறுவனம் 12.3 சதவீதம் அதிகளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
2,300 கோடி ரூபாய் லாபம்
எச்சிஎல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் சில வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்தாலும், தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிறுவனம் மார்ச் மாத காலாண்டில் சுமார் 12.3 சதவீதம் உயர்வில் 2,325 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
வருவாய்
கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 2 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது எச்சிஎல் டெக்னாலஜிஸ். மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் 12,053 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 20.8 சதவீதம் அளவிற்கும், விற்பனை 12.7 சதவீதம் அளவிற்கும் உயர்ந்துள்ளது.
டாலர் வருவாய்
அதேபோல் டாலர் மதிப்பீட்டில் காலாண்டு வாரியாக 4.1 சதவீதமும், வருடாந்திர அளவீடுகளில் 14.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பிராந்திய வளர்ச்சி
இந்நிறுவனம் ஐரோப்பாவில் 3 சதவீத வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் 5.3 சதவீதம் அளவிலான வளர்ச்சி அடைந்து, ஒட்டுமொத்தமாக 15.8 சதவீதம் வளர்ச்சியை எச்சிஎல் இக்காலாண்டில் பதிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
இந்நிறுவனம் இக்காலாண்டில் 50 மில்லியன் டாலர் மதிப்புக் கொண்டு 6 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதேபோல், 20 மில்லியன் டாலரில் 10 வாடிக்கையாளர்களையும், 10 மில்லியன் டாலரில் 9 வாடிக்கையாளர்களையும், 5 மில்லியன் டாலரில் 13 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
ஈவுத்தொகை
இந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு எச்சிஎல் நிறுவனம் ஒரு பங்கிற்கு 6 ரூபாய் ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. மேலும் 57 காலாண்டுகளாக தொடர்ந்து எச்சிஎல் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் எண்ணிக்கை
மார்ச் காலாண்டில் மட்டும் எச்சிஎல் நிறுவனம் சுமார் 4,881 ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,15,973 ஆக உயர்ந்துள்ளது.
ஆட்குறைப்பு
முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு பற்றி அதிரடியான முடிவுகளை அறிவித்து வரும் நிலையில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் மெளனமாக இருக்கிறது.