டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பிறகு ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல, ஐடி நிறுவனங்களும் பல பிரச்சனைகளையும், வர்த்தகப் பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது. இதுகுறித்துப் பல முறை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் வர்த்தகத்திற்காக அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என முடிவு செய்து முதல் இந்திய நிறுவனமான NIIT சீனாவிற்குச் சென்றுள்ளது.
சீனாவில் இந்திய நிறுவனம்..
சீனாவில் பிக் டேட்டா துறையில் ஆராய்ச்சி செய்யவும், இத்துறையில் புதிய சேவைகள் மற்றும் பிராடெக்ட்களை உருவாக்கவும் இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சீனா.
இசன்படி சீனா இந்தியாவில் ஐடி சேவை அளிக்கும் NIIT நிறுவனத்தின் தலைவரான ராஜேந்திர பவார் அவர்களுக்கு நேரடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர பவார்
சீனா NIIT நிறுவனத்தை வெறும் வர்த்தக அழைப்பாக மட்டும் அல்லாமல் பிக் டேட்டா வர்த்தகத்தில் மேம்பாட்டுக் குழுவில் ஆலோசனை உறுப்பினராகவும், சர்வதேச வர்த்தக இணைப்பில் உதவி செய்யவும் ராஜேந்திர பவார் அவர்களுக்குச் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
ஐடி கல்வி
சீனா மக்களுக்குத் தகவல் தொழில்நுட்ப கல்வி அளிப்பதில் NIIT நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. சமீபத்தில் சீனாவின் தலைநகரான Guizhou நகரத்தில் Guiyang பகுதியில் பிக் டேட்டா பயிற்சிக்காகப் பெரிய அலுவலகத்தை அமைத்துள்ளது.
வல்லரசு நாடுகள்
இதுகுறித்து ராஜேந்திர பவார் கூறுகையில், உலகச் சந்தைகளில் வல்லரசு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்திய ஐடி துறையின் பங்களிப்பைத் தொடர்ந்து கவனித்து வருகிறது சீனா, இதன் காரணமாகவே தற்போது இந்திய நிறுவனங்களுடன் மிகப்பெரிய அளவில் கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கடுமையான டெக்னாலஜிகள்
சீனா தற்போது தொழில்நுட்ப சந்சையில் கடுமையான டெக்னாலஜிகளாகப் பார்க்கப்படும் டேட்டா அனலிசிஸ் போன்றவற்றில் வளர்ச்சி அடைய இந்தியர்களையும் இந்திய நிறுவனங்களின் துணையை நாடுகிறது.
முதலீடு
இந்திய நிறுவனங்களின் கூட்டணியில் துவங்கப்படும் வர்த்தகத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யச் சீனா அரசும், முதலீட்டாளர்களும் தயாராக உள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது என நாஸ்காம் அமைப்பின் தலைவரான ககன் தெரிவித்துள்ளார்.