நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ மற்றும் எம்டி-ஆகப் பதவி வகித்த என்.சந்திரசேகரன் கடந்த நிதியாண்டிற்கான சம்பளமாகச் சுமார் 30 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார்.
இது இந்நிவன ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விடவும் சுமார் 460 மடங்கு அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
30 கோடி ரூபாய்
டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாகச் சந்திரசேகரன் 2017 பிப்ரவரி மாதம் வரை பணியாற்றினார். இந்நிலையில் 2016-17ஆம் நிதியாண்டுக்கான சம்பளமாக டிசிஎஸ் நிர்வாகம் இவருக்குச் சுமார் 30 கோடி ரூபாயை அளித்துள்ளது.
இதில் 83 சதவீதம் தோராயமாக 25 கோடி ரூபாய் சம்பளம் கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது என டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
5 கோடி ரூபாய்
2017ஆம் நிதியாண்டில் 11 மாதங்கள் பணியாற்றியதற்கும், இலக்கை அடைந்திற்கும் கமிஷனாக 25 கோடி ரூபாயை சந்திரசேகரன் பெற்ற நிலையில், மீதமுள்ள 5 கோடி ரூபாயை 2.4 கோடி ரூபாயை அடிப்படை சம்பளமாகவும், 2.7 கோடி ரூபாயை போனஸாகவும் (perquisites) பெற்றுள்ளார்.
இது குறைவான சம்பளம்
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சந்திரசேகரனின் சம்பளம் இந்த வருடம் 16.6 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டில் சந்திரசேகரன் சுமார் 36 கோடி ரூபாய் அளவிற்குச் சம்பளமாகப் பெற்ற நிலையில் 2016-17ஆம் ஆண்டில் 11 மாத பணிக்கு அவருக்குக் கிடைத்த தொகை சற்றுக் குறைவானதே.
டாடா சன்ஸ்
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி 2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், இப்பதவியில் சந்திரசேகரன் பிப்ரவரி வரி மாதம் நியமிக்கப்பட்டார்.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாத் அடுத்த 5 வருடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சம்பளம்
டாடா குழுமம் இதன் புதிய தலைவரான சந்திரசேகரனின் சம்பளம் குறித்து இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முன்பு அடிப்படை சம்பளமாக 4.9 கோடி ரூபாயும், நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் 200 சதவீதம் வேரியபில் பேஅவுட் ஆக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறை
தற்போது ஐடி துறையில் இருக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்துச் சந்திரசேகரன் கூறுகையில், பணிநீக்கம் நடவடிக்கைகள் பயப்படும் வகையில் இல்லை, இன்னமும் ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது எனத் தனது கருத்தை ஒரு கட்டுரையில் பதிவிட்டார்.
வேலைவாய்ப்பு
எப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது வர்த்தகமும் டெக்னாலஜியும் அதிகளவில் பிணைந்துள்ளது. இது வேலைவாய்ப்பு சந்தைக்கு மிகவும் லாபகரமான ஒரு சூழ்நிலை. அடுத்தச் சில மாதங்களில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.