சென்னை: பிரதமர் மோடி நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு சொல்லாது என அறிவிக்கப்பட்ட பின் இந்தியாவில் பலரின் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. இதில் யார் உண்மையான மோசடியாளர் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இன்று வரை நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜயவாடா-வில் சி.கிஷோர் லால் என்பவரின் வங்கி கணக்கில் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் சுமார் 18 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
யார் இந்தக் கிஷோர் லால், என்பது தான் ஆச்சரியம்..?!!
கிஷோர் லால்
30 வயதாகும் கிஷோர் லால் விஜயவாடாவில் வசித்து வருகிறார், இவர் வீடுவீடாக மிட்டாய்களைக் கொண்டுபோய் விற்பனை செய்யும் வியாபாரி.
நவம்பர் 8ஆம் தேதி இவர் கணக்கில் மும்பையில் இருந்து பணம் வைப்பு செய்யப்பட்டும், நவம்பர் 16ஆம் தேதி வரையில் விஜயவாடாவிலும் பிற மாநிலங்களில் இருக்கும் கணக்குகளுக்கும் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
பணப் பரிவர்த்தனையின் மதிப்பு 18 கோடி ரூபாய் என்பது தான் ஆச்சரியமான விஷயம்.
வருமான வரித்துறை
நவம்பர் 8ஆம் தேதி முதல் வங்கி கணக்குகளில் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்து வரும் நிலையில், இந்த ஆய்வில் கிஷோர் லால்-இன் கணக்கு வருமான வரிதுறையின் கையில் சிக்கியுள்ளது.
அகமதாபாத்
இதுகுறித்துக் கிஷோர் லால் கூறுகையில், தான் அகமதாபாத் நகரை தலைமையாகக் கொண்டு இயங்கும் வங்கியின் விஜயவாடா கிளையில் வங்கி கணக்கை திறந்தேன், ஆனால் இதில் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைக்கும் தனக்கும் எவ்விதமான சமந்தமும் இல்லை எனக் கூறினார்.
வங்கி அதிகாரி
மேலும் அவர் வங்கி கணக்கை திறக்கும்போது வங்கியின் மேலாளர் வங்கி கடன் வாங்குவதற்காகப் பல காசோலைகளில் கையெழுத்து பெற்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதான் பணம் வங்கி கணக்கில் திரும்பப் பெற முக்கிய வாயிலாக இருக்கும் எனக் கிஷோர் தெரிவித்தார்.
வருமான வரித்துறை
ஆனால் வருமான வரித்துறை கூறுகையில் பணத்தைக் காசோலை மூலம் எடுத்தாலும் அதற்கு இணைய வங்கி சேவை வேண்டும் என்று கூறுகிறது.
வங்கிக்கு தொடர்பு..
இதன் மூலம் இவ்வங்கி கணக்கில் செய்யப்பட்ட அனைத்துப் பணப் பரிமாற்றத்திற்கும் வங்கி அதிகாரிகளின் விதிமீறல்கள் மற்றும் தலையீடு உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் பணம் எங்கிருந்து வந்தது, எந்தக் கணக்கிற்குச் சென்றுள்ளது என அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம் என வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிசிடிவி
மேலும் வங்கி அதிகாரிகளிடம் வருமான வரித்துறை வங்கி கிளையின் சிசிடிவி பதிவை கோரியுள்ளது. இதனைக் கொண்டு இவ்வழக்கின் விசாரணையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளது வருமான வரித்துறை.
மற்றொரு வழக்கு
இதேபோல் அனந்தபூர் மாவட்டத்தில் தாடிபட்ரி நகரில் இருக்கும் ஸ்ரீநிவாசலு நாயடு அவர்களுக்கு 1.84 கோடி ரூபாய் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ் வந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார். இவரின் வங்கி கணக்கு ஆந்திர வங்கியின் தாடிபட்ரி கிளையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.